Saturday, March 28, 2020

ஒரு மாதம் நீடிக்கலாம் ஊரடங்கு! கொரோனாவின் தாக்கம் அதியுச்சம்



கொரோனா வைரஸ் பரவுவதை இலங்கை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த வைரஸின் தாக்கம், வீரியம் இன்று உலகளவில் அதியுச்சத்தில் இருக்கின்றது. எந்நேரத்திலும் என்னவும் நடக்கலாம். எனவே, இந்த வைரஸைக் கட்டுப்படுத்த இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஊரடங்குச்சட்டம் ஒரு மாதத்துக்கும் நீடிக்கப்படலாம் என கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின்(ஐ.டி.எச்.) பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா வைரஸ் பாரிய உயிர்க்கொல்லி நோய். இந்த வைரஸ் தொற்றை முழுமையாக இலங்கை கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைத்துவிடக்கூடாது.
இந்த வைரஸின்தாக்கம் - வீரியம் இன்று உலகளவில் அதியுச்சத்தில் இருக்கின்றது. உலக நாடுகள்செய்வதறியாது தவிக்கின்றன. தினந்தோறும் உயிரிழப்புகள் இடம்பெற்று வருகின்றன.
எந்நேரத்திலும் என்னவும் நடக்கலாம். எனவே, இலங்கையிலுள்ள பொதுமக்கள்கவனயீனமாகச் செயற்பட்டால் மேலும் ஒரு மாதத்துக்கு இந்த ஊரடங்குச் சட்டம்நீடிக்கப்படலாம்.இலங்கை தற்போது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நிலையில் தான் இருக்கின்றது.

மருத்துவர்கள் நேரம் காலம் பாராமல் முயற்சிகளை செய்து வருகின்றனர். தற்போது நாட்டுக்கு வந்துள்ள பலர் தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தற்போதுவரை 106 நோயாளர்களை அடையாளம் கண்டிருக்கின்றோம். இன்னும் பலர்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். முடிந்தளவு மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஏனென்றால் வெறுமனே முகக்கவசத்தை அணிந்துகொண்டால் மாத்திரம் இந்த வைரஸ் பரவுவதைத் தடுத்துவிட முடியாது.தொடுகை மற்றும் மற்றவர்களுடன் நெருக்கமான அணுகுவதால் இந்த வைரஸ் பரவுகின்றதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
உலகில் ஏனைய நாடுகளும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தினால்தான் மற்றைய நாடுகளுக்கும் பாதுகாப்பு ஏற்படும்.
அதேபோல் எதிர்வரும் ஜுலை மாதம்வரை இந்தநிலை நீடிக்கலாம் என்றும் சர்வதேச அளவில் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் நாங்கள் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்திவிட்டதாக எண்ணக்கூடாது. தற்போதுள்ள தொற்று ஒழிப்பு செயற்பாடுகள் தொடர்ந்தும் அப்படியே முன்னெடுக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் மாதத்துக்குள் பிரதிபலனை அடையலாம்.
எனினும், கொரோனா வைரஸ் நோயாளர்கள் மறைந்திருந்தால் நிலைமை மாறலாம். அவர்களிடம்இருந்து மேலும் பரவலாம். சில வேளைகளில் சிலருக்கு இந்த வைரஸ் அறிகுறிகள் குறைந்தும் காணப்படலாம். அதனால் அருகில் இருப்போருக்கு வைரஸ் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இடைவெளியைப் பேணுதலே சிறந்த வழிமுறையாககருதப்படுகின்றது.
மக்களின் பயணங்களைக் குறைத்தலும் சமூக இடைவெளியை அப்படியே பேணுதலுமே வைத்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஊரடங்குச் சட்டம் இருக்கின்ற போதிலும் அதனைமக்கள் மீறினால் நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.
ஒரு வாரம் ஆகலாம் அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம். இப்படியான கவலையீனம் இருந்தால் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படலாம். ஆகவே, எல்லாம் மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment