Sunday, September 10, 2017

யாழ். பெண் பாலியல் தொழிலாளி ( 'சோடாமூடி' ) ஒருவர் பற்றிய சிறு பதிவு.


யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் பற்றிய சிறு பதிவை, முக நூல் வழியாகப் பார்க்க நேர்ந்தது. அது பலவகையில் முக்கியமானதொரு பதிவாக இருந்தது.
அதைத் தொடர்ந்து இலக்கிய இதழ் ஒன்றின் 'பாலியல் நலம்' சார்ந்த கட்டுரையினைப் படிக்க முடிந்தது. அவையே, இப்போது என்னை இப் பதிவினை உடனடியாக எழுதத் தூண்டியிருக்கின்றன.
நீண்ட காலத்துக்கு முன்னர் (கிட்டத்தட்ட 'அறுபதுகள்', 'எழுபதுகள்' காலப்பகுதி), யாழ் நகர்ப்பகுதிகளில் 'உலாத்திய' பெண் பாலியல் தொழிலாளி, 'சோடாமூடி' என்ற பெயரால் நன்கு அறியப்பட்டிருந்தார். அந்தப் பெயருக்குப் பின்னே ஒரு 'வஞ்சகமான' கதை இருந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் 'கதையை' நான் முன்னரே அறிந்திருந்தேன்.
'விளிம்புநிலை' மனிதர்களுடனேயே அவரது சகவாசம் பெரும்பாலும் இருந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவர், அக் காலத்தில் பலருக்கு வேடிக்கைக்குரியவராகவும் வெறுப்புக்குரியவராகவும் இருந்திருக்கிறார்.
தனிமைப்பட்டு பாலியல் தொழில் செய்ய முடியாத நிலையில் தளர்ந்துபோய் வைத்தியசாலை முன்பாகக் கடலை வியாபாரம் செய்து வந்த அந்த மனிதப் பிறவியை, 'ஆயுததாரிகள்' (ஏதோ ஒரு 'இயக்கம்' சார்ந்தவர்கள்.) சுட்டுக் கொன்றது, சமூக அவலங்களில் ஒன்றாகும்.
பல்வேறு சமூக, உளவியல் காரணங்களால் உருவாக்கப்பட்டு அலைக்கழியும் பாலியல் தொழிலாளர்களின் கதைகள், சமூக ஆய்வுகளுக்குரியவை. 'சோடாமூடி' எனப்படும் பெண்ணின் கதையானது, பலவகையான சிந்தனைகளையும் கேள்விகளையும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் எழுப்பக் கூடியது. அது, ஒரு திரைப்படம் ஆக்கப்படக்கூடியது. சந்தர்ப்பம் சரியாக அமைந்தால், அக் 'கதையை' 'ஆராய்ந்து', ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்துவிடலாம் என்று தோன்றுகிறது.
அதன் மூலம், தமிழ்ச் சமூகத்தின் பாலியல் சார் சிக்கல்களும் உள் முரண்களும் கசடுத்தனங்களும் கலாபூர்வமாகப் பேசப்படக்கூடும். பாலியல் தொழிலாளர்கள் சார்ந்த தமிழ்ப் படைப்புகள் (கதைகள்), ஜி.நாகராஜன் மற்றும் ஜெயகாந்தன் போன்றோரால் முன்வைக்கப்பட்டு தமிழ்ச் சூழலில் கவனிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன.
சர்வதேச ரீதியில் பாலியல் தொழிலாளர்களைப் பல வகையினராகப் பார்க்க முடியும். பெரும்பாலும் அவர்கள் பல்வேறு சமூக 'நிர்ப்பந்தங்களால்', மனப்பிறழ்வால் உருவாகியவர்களாகவே இருப்பார்கள். 'பகட்டான' வாழ்க்கைக்காகவும் உடல் இன்பத்துக்காகவும் ஒருவித சாகச மனோபாவத்திலும் சுய விருப்போடு பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் கூட இருக்கக்கூடும்.
பல்வேறு சமூகக் காரணங்களால் உருவாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் இப்படியான மனிதர்களைப் பற்றி, பல இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறேன். இலங்கையில் இருந்து ஐரோப்பா வரையில் அறியக் கிடைத்த பாலியல் தொழிலாளர்கள் பற்றிய 'சித்திரங்கள்' விசித்திரமானவை.
போருக்குப் பிறகு, இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களின் மத்தியில் பாலியல் தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களால் 'உருவாக்கப்படுகிறார்கள்' என்று ஒரு கருத்து இருக்கிறது. உண்மையில், இது பரிசீலிக்கப்படவேண்டியதும் ஆய்வுசெய்யப்பட வேண்டியதுமாகும்.
பாலியல் சார்ந்த விழிப்புணர்வும் புரிந்துணர்வும் குறைவாக உள்ள தமிழ்ச் சூழலில் இத்தகைய விடையங்கள் பேசப்படுவது அரிது. பாலியல் வறுமையும் பாலியல் வன்முறைகளும் பாலியல் சார் பிரச்சினைகளும் அதிகரிக்கும் சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறுவதை விரும்புகிறவர்கள், சமூகவிரோதிகளாகவே இருக்க முடியும். மனித குலத்தின் ஆதார சக்திகளில் ஒன்றாகிய 'பாலியல்' பற்றிய விழிப்புணர்வும் புரிந்துணர்வும் அதிக அளவில் கொண்ட சமூகம் பெருமளவுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
http://www.jvpnews.com/srilanka/04/140222

No comments:

Post a Comment