வெள்ளவத்தை ஹோட்டலொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய ஜோடியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைகள் முடிவடையும் வரை இந்த ஜோடியின் மரணம் கொலையா? தற்கொலையா? என உறுதி செய்யப்பட முடியாது என்றும் பொலிஸார் கூறினர்.
கடவுச்சீட்டிலுள்ள முகவரிக்கமைய இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கூடாக உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் நாடு திரும்பியதும் எதிர்வரும் திங்கட்கிழமையன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குறித்த ஜோடி புதன்கிழமை இரவிற்கு பின்னர் அறையை விட்டு வெளியேறாத நிலையில் ஹோட்டல் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அறையின் கதவு உட்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிந்ததால் யன்னல் கதவினூடாக பொலிஸார் அறைக்குள் சென்றனர். அப்போது ஜோடி கட்டிலில் சடலமாக காணப்பட்டனர்.
பெண்ணின் வயிறு பெரிதாக இருந்ததாகவும் அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் மலேசிய நாட்டின் 10 ரிங்கிட் நாணயம் மாத்திரமே இருந்துள்ளது.
மேற்படி ஜோடி இலங்கை வந்த நாளிலிருந்து கெசினோகளுக்குச் சென்று சூதாட்டம் ஆடி தமது பணம் முழுவதையும் இழந்திருப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
எனினும், பிரேத பரிசோதனையின் முடிவிலேயே இவர்களது மரணத்திற்கான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதென்பதில் பொலிஸார் உறுதியாகவுள்ளனர்.
No comments:
Post a Comment