Thursday, September 13, 2018

பிரித்தானிய தமிழரை சித்திரவதைக்குள்ளாக்கிய சுன்னாகம் பொலிஸ்! அம்பலமானது ஆதாரம்!!

பிரித்தானியாவிலிருந்து தாயகம் வந்த தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவரால் சுன்னாகம் பொலிஸ் நிலையம் மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
உடுவில் பகுதியைச் சேர்ந்தவரும் பிரித்தானியாவில் குடியுரிமை பெற்றவருமான மொறிஸ் அருணாசலம் பிரகாஷ் (வயது -61) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரே தன்னைத் தாக்கியதாக குடும்பத்தலைவரால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அவரால் குற்றஞ்சாட்டப்படும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்தான் மல்லாகம் மாதா ஆலயத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்கக் காரணமானவர் என்பது தெரியவந்துள்ளது.
உடுவில் மகளிர் கல்லூரிக்கு அண்மையிலுள்ள பல கோடி ரூபா பெறுமதியான வீடு மற்றும் ஆதனத்துக்குச் சொந்தக்காரரான மொறிஸ் அருணாசலம் பிரகாஷ் என்ற குடும்பத்தலைவர், நீண்டகாலமான பிரித்தானியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.
அவர் தனது பரம்பரை ஆதனத்தை மீட்க தாயகம் திரும்பியுள்ளார். தனது பரம்பரை ஆதனம்தொடர்பான ஆவணங்களை உடுவில் பிரதேச சபையில் சமர்பித்து அவற்றுக்கான உரிமத்தைக் கோரியுள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்பது தொடர்பில் உடுவில் பிரதேச சபையால், பகிரங்க அறிவித்தல் கோரப்பட்டது. எனினும் பகிரங்க அறிவித்தல் காலப் பகுதிக்குள் வேறு எவரும் அந்த ஆதனத்தை உரிமை கோரவில்லை.
அதனால் தனது சொத்துக்களைப் பராமரிப்பதற்கு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தலைவர் அனுமதி பெற்றுள்ளார். அதற்கு அமைவாக தனது காணிக்குள் அவர் நேற்றுச் சென்றுள்ளார்.
அந்த காணிக்குள் தனியார் பாதுகாப்புச் சேவையின் காவலாளி ஒருவர் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். எனினும் அவரைக் கடமைக்கு அமர்த்தியவர் யார் என்பது உரிமையாளருக்குத் தெரியவில்லை.
இந்த நிலையில் உரிமையாளர் அங்கு சென்றதும், காணியிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வெளியேறியுள்ளார். அவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று காணி உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்கியுள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், காணி உரிமையாளரை நேற்று புதன்கிழமை முற்பகல் கைது செய்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து வாக்குமூலம் பெற்ற பின்னர், இன்று மாலை மல்லாம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்காக, தெல்லிப்பழை வைத்தியசாலையில் சட்ட மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் குடும்பத்தலைவரின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர், காயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னை பொலிஸார் தாக்கினார்கள் என அவர் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தலைவரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அவரை விடுதியில் தங்கவைத்து சிகிச்சையளிக்கவேண்டும் என மருத்துவரால் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது.
“குடும்பத்தலைவர் தற்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் முதலாம் விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கழுத்தில் கண்டல் காயம் உள்ளது. அவரது கழுத்துப் பகுதி எக்ஸ்ரே எடுக்கவேண்டும்.
அத்துடன், சட்ட மருத்தவரும் அவரைப் பரிசோதிக்கவேண்டும். அதன்பின்னரே அவரை நீதிமன்றில் முற்படுத்த அனுமதிக்க முடியும்” என்று தெல்லிப்பளை வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

https://www.ibctamil.com/srilanka/80/106065

No comments:

Post a Comment