கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் போராட்டத்தில் ஒரு சிங்களப் பெண்மணி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இவர் வேறு யாரும் இல்லை. அனைவரும் நன்கு அறிந்த பரீட்சயமான ஒருவர் தான்.
இராஜகிரிய பகுதியில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடதான் அந்த பெண்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் ஒருவருடமாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஒரு வடிவம் தான் இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்னறில் நடைபெற்ற மாபெரும் போராட்டம்.
இதற்கு வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த பிரதிநிதிகளும், சிவில் சமூக அமைப்புகள்,அரசியல் கட்சிகள் மதகுருமார்கள், தென்னிலங்கை அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இவர்களுடன் சந்தியா எக்னெலிகொடவும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
தமது குழந்தைகளுக்காக கிளிநொச்சியில் வீதியில் இறங்கி தாய் மார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
சமூக பிரச்சினைகளை காரணம் காட்டி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இதுவரை தீர்வுகளை தேடித்தரவில்லை.
ஜெனீவாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு. இந்த நாட்டின் நீதி எங்கே? இந்த நாட்டின் செயற்றிறன் எங்கே?
எமக்கு ஒரு தீர்வை தரும் அளவுக்கு இந்த ஆட்சிக்கு சக்தி இல்லை. என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்களப் பெண்மணி தமிழர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் கொடுப்பது அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டதுடன், சமூகவலைத்தளங்களில் இந்த விடயம் பரவிவருகின்றது.
No comments:
Post a Comment