மட்டக்களப்பு – கிரான்குளம் பிரதேச மக்கள் நேற்று (20-09-2014) சனிக்கிழமை வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 திகதி திங்கட்கிழமை, இரவு 10-15க்கு கிரான்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 22வயதான ஆறுமுகம் ருத்திரநாதன் என்ற இளைஞன் உயிரிழந்தார்.
சந்தியில் பேசிக்கொண்டு நின்ற இளைஞர்கள் மீது, மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிச் சென்ற வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குக் காரணமாக இருந்த வேன் சாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கூறியே மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தால் மட்டக்களப்பு – கல்முனை – கிரான்குளம் பிரதான வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பிதம் அடைந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தவர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிஸ் உயரதிகாரிகளிடம் விபத்திற்கு காரணமாக இருந்த வேன் சாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், விபத்தில் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
குறித்த விபத்துக்கு காரணமான சாரதியை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிமன்றத்தினால் சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். தொடர்ந்தும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
http://www.jvpnews.com/srilanka/82371.html
No comments:
Post a Comment