“கொழும்பு விமான நிலையத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. அன்று காலை எட்டு மணிக்கு முன்னர் உனது மகளை நீ வந்த பொறுப்பேற்காமல் விட்டால், அவளை நாம் மனநோயாளர் வைத்திய சாலைக்கு அனுப்பி விடுவோம். உனது மகள் மனநோய்க்கு ஆளாகியுள்ளார். என்று தெரிவித்தனர். இதனைக்கேட்டு நான் பதறிப்போனேன்”.
இவ்வாறு மூதூர் லிங்க புரத்தைச் சேர்ந்த தாயாரான கோகில நாயகி செல்வக்குமார் தெரிவித்தார். அவர் அது தொடர்பில் விளக்கிக் கூறுகையில், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி எனது மகள் துஷாந்தினி பணிப்பெண்ணாக சவூதிக்குச் சென்றிருந்தார். அவர் திடீரென கடந்த மாதம் ஒன்பதாம் திகதி (09.06.2014) பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளார். அப்போதுதான் மேற்படி தகவல் எனக்கு கிட்டியது.
இந்தத் தகவலைக் கேட்டு நான் அதிர்ந்துபோனேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டவரிடம் கூறினேன், ” நாங்கள் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் உடனே வரமுடியாது அங்கு வருவதாயின் மாலை ஐந்து மணிக்கு மேலாகிவிடும் என்று அழுதேன்”. அவர் கூறினார் “உங்கள் மகளை பஸ்ஸிலோ ரயிலிலோ கொண்டு போக முடியாது” என்று.
நான் ஊரவரை கும்பிட்டு மன்றாடி கடன்பெற்றுக்கொண்டு வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி மூன்றுபேரை துணைக்கு அழைத்துக்கொண்டு விமான நிலையத்துக்குப் போனேன். அங்கு எனது மகளைக் காணமுடியவில்லை. எங்கள் ஒருவருக்கும் சிங்களம் தெரியாது.
மிகவும் கஷ்டப்பட்டு முகவரியை அறிந்துகொண்டு கொழும்பிலுள்ள ஒரு இடத்துக்குச் சென்றோம். எனக்கு இடத்தின் பெயர் தெரியாது. அங்கே எனது மகள் சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டது போல் வைக்கப்பட்டிருந்தாள். அவளுக்கு எங்களை அடையாளம் காணமுடியவில்லை. மயக்க நிலையில் கிடந்தாள். நானும் என்னுடன் வந்தவர்களுமாகச் சேர்ந்து மகளை ஏற்றிக்கொண்டு உடனே ஊருக்குத் திரும்பினோம்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 27 நாள் சிகிச்சையின் பின் சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளாள் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து மகளிடம் நடந்த சம்பவங்களைப்பற்றி விசாரித்தபோது, அவள் கூறியது அதிர்ச்சியளிப்பதாக அமைந்திருந்தது.
19 வயதான அந்தப் பெண் கூறுகையில், “லிங்கபுரம் பாடசாலையில் க.பொ.த. சாதாரண தரம் வரை படித்து பரீட்சைக்கு தோற்றிவிட்டு முடிவுக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். எனக்கு அப்போது வயது 17. எனது தந்தை கூலித் தொழிலைச் செய்து வருபவர். எனக்கு இரண்டு ஆண் சகோதரர்களும், நான்கு பெண் சகோதரிகளும் உள்ளனர். எல்லோருக்கும் மூத்தவள் நான்.
யுத்தம், இடம்பெயர்வு, வீடுவாசல் இழப்பு, தொழிலின்மை போன்ற பல்வேறு காரணங்களினால் சொல்லமுடியாத வறுமையை எமது குடும்பம் அனுபவித்துக்கொண்டிருந்தது. அவ் வேளையில்தான் ஒரு நபர், “நான் கிளிவெட்டியைச் சேர்ந்தவன். வெளிநாட்டுக்கு பணிப்பெண்களை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்” என சொல்லிக்கொண்டு மட்டக்களப்பிலிருந்து வந்திருந்தார். எனது குடும்பத்தின் வறுமை நிலையை எடுத்துக் கூறி எனக்கு வெளிநாடு செல்லமுடியுமா என வினாவினேன். மைனராக இருக்கும் என்னை மேஜராக மாற்றி பாஸ்போட் மற்றும் விவகாரங்களை செய்ய வேண்டும் என்பதற்காக எனது பெயரை கிஷாந்தினி என மாற்றி வயதையும் 24 என உயர்த்தி சவூதிக்கு என்னை அனுப்பி வைத்தார் அந்த முகவர் என்றார்”.
இதுபற்றி தாயார் கோகிலநாயகியிடம் விசாரித்தபோது, “எமது மகளை எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தோம். கூழோ கஞ்சியோ ஒன்றாக இருந்து குடிப்போம். நீ போகவேண்டாம் என்று தடுத்தோம். ஆனால் முகவரின் ஆசை வார்த்தையில் மயங்கிப்போன எனது மகள், குடும்பத்தின் வறுமை நிலையை, தனது தம்பி தங்கையரின் எதிர்கால வாழ்வை மனங்கொண்டு தான் போக வேண்டும் என்று அடம்பிடித்தாள். நாங்கள் 22.12.2012 கொழும்புக்கு சென்று விமானத்தில் ஏற்றிவிட்டுத் திரும்பினோம்.
சவூதிக்குப்போன எனது மகள் மூன்று மாதங்களின் பின் அறுபதாயிரம் ரூபாவை அனுப்பியிருந்தாள். அடுத்த மூன்று மாதங்களின் பின் அறுபதாயிரம் ரூபாவை வெஸ்டன் யூனியன் மூலம் அனுப்பியிருந்தாள். மகள் சவூதிக்குப் பயணமாகும்போது, குறித்த முகவர் ஜீவராஜ் 10 ஆயிரம் ரூபாவை முற்பணமாகத் தந்து பிள்ளைக்கு உடுப்பெடுக்கும்படி கூறியிருந்தார். வேறு எந்தப் பணமும் எமக்குத் தரப்படவில்லை.
இறுதியாக, ஜூன் மாதம் 2013 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக 20 ஆயிரம் ரூபாவை எமக்கு அனுப்பி வைத்ததன் பின்னர் இவ்வருடம் (2014) ஜூன் மாதம் வரை எமது மகளிடமிருந்து எவ்வித பணமும் வரவில்லை. நாங்கள் மகளுடன் தொடர்புகொள்ள முனைந்தும் எங்களால் முடியவில்லை. அவர் எங்களுடன் தொடர்பு கொள்ளமுடியுமே தவிர எங்களால் மகளுடன் தொடர்பு கொள்ளவே முடியாது.
சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக மகளின் தொடர்பின்மையால் நாங்கள் மிகவும் பயந்துபோயிருந்தோம். அவளின் தம்பி தங்கையர் ஆசையோடு கேட்பார்கள். ஆனால் எந்த பதிலையும் எமக்கு சொல்ல முடியாமல் இருந்தது. முகவர் ஜீவராஜிடம் மகளின் நிலை அறிவதற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.ஆனால் அவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் ஏங்கிக் கொண்டிருந்தோம்.
பணிப்பெண்ணாக சென்ற யுவதியிடம் சவூதியில் என்ன நடந்தது என்று விசாரித்தோம். அவர் விளக்கமாக கூறினார். “கொழும்பிலிருந்து பலருடன் பயணம் செய்த நான் விமான நிலையத்தில் இறங்கியபோது சொல்லி வைத்தது போல் ஒருவர் வந்திருந்தார். தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு விமான நிலையத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள தனது தாயாரின் வீட்டில் என்னை கொண்டுபோய் விட்டார். அக்குடும்பத்தவரின் அங்கத்தவர் தொகை அதிகம். கடுமையாக வேலை செய்யவேண்டிய நிலை காணப்பட்டது.
இரண்டு தடவைகள் எனது சம்பளத்தைத் தந்த பின்பு, பத்து மாதங் களுக்கும் மேலாக சம்பளப் பணம் எனக்குத் தரவில்லை. எனது குடும்பத்தின் கஷ்ட நிலையைக் கூறி சம்பளத்தைக் கேட்டேன். அனுப்பி வைப்பதாகக் கூறினார்கள். பல மாதங்கள் சென்ற காரணத்தினால் சம்பளப் பணம் கிடைக்காததை எனது பெற்றோரிற்குச் சொல்ல வேண்டும், போன் பண்ண போன் தாருங்கள் என மன்றாடினேன். அங்கிருந்து வாட்டசாட்டமான ஆண் ஒருவர் என்னை தனது காலால் உதைத்தார். வீட்டிலுள்ள சட்டம் கொண்டு என்னைத் தாக்கினார். அவ்வளவுதான். நான் மயக்கமுற்று விட்டேன். மீண்டும் சுயநினைவு வந்தது என்பது எப்போது என எனக்கு சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும், திருகோணமலை வைத்தியசாலைக்கு வந்தபின்பே சுயநினைவு வந்தது என அவர் தெரிவித்தார்.
அவரின் தாயாரிடம் மகளை எவ்வாறு இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்தீர்கள் என வினவியபோது, “ எனது மகள் 10 மாதங்களுக்கு மேலாகியும் எங்களுடன் தொடர்பு இல்லாத காரணத்தினால், அவரின் சிறிய தாயார் ஒருவர் அங்கு உள்ளார். அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் எனது துன்பத்தையும் அவலத்தையும் தெரிந்து கொண்டு சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி பிள்ளைக்கு உதவும்படி கோரியுள்ளார். அவருடைய உதவியினால் தூதரகம் எனது மகளை ஊருக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தது என்று கேள்விப்பட்டேன் என அந்தத் தாய் குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், எனது மகள் எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டுமாயின், தூர இடத்திற்கு அழைத்துச் சென்று ‘பூத்தில்’ கதைக்க விடுவார்கள். வீட்டுத் தொலைபேசியோ, கையடக்கத் தொலைபேசியையோ தருவதில்லை. சம்பளத்தைத் தாருங்கள் என்று கேட்டதற்காகவே, எனது மகள் வீட்டுக்கார எஜமானால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். காருக்குள்கூட தூக்கி எறியப்பட்டிருக்கிறாள். அவளுக்கு திருகோணமலை வைத்தியசாலையில் வைத்து சிறந்த முறையில் சிகிச்சை அளித்ததன் காரணமாகவே, மீண்டும் எனது மகள் மறுபிறவி எடுத்துள்ளார் என அந்தத் தாய் கூறினார்.
இப் பெண்ணுக்கு நேர்ந்த கதிபற்றி திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் தலைவியை வினாவியபோது, திருகோணமலை மாவட்டத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அப்பாவிப் பெண்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். யுத்தத்திற்குப் பின் இந்த நிலைமைகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. வறுமை, வாழ்வாதாரமற்ற நிலை, குடும்பத் தலைவர்களைப் பறிகொடுத்த பரிதாபம் போன்ற பல்வேறு காரணங்களால் மூதூரின் பல கிராமங்களில் இக்கொடுமைகள்
நடந்துகொண்டிருக்கின்றன. முன்னம் போடி வெட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முகவரின் ஆசை வார்த்தைக்கு ஏமார்ந்து கணவருக்குத் தெரியாமலே பாஸ்போட், வீசா எடுத்து தனது நான்கு வயது குழந் தையையும் பரிதவிக்க விட்டு விட்டு ஏதோவொரு நாட்டுக்குப் போய் விட்டார். அவளது கணவன் 10 மாதங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறார். இதுமாத்திரமல்ல சில கிராமங்களில் 15 வயதுகூட அடையாத சிறுமிகளை குறிப்பிட்ட சில வெளிநாட்டு முகவர் கள் வயதைக் கூட்டி பாஸ்போட் போன்ற வற்றை எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கும் கொடுமைகளையும் கேள்விப்படுகிறோம் என பெண்கள் வலையமைப்பின் தலைவி தெரிவித்தார்
No comments:
Post a Comment