'ஈழநேசன்' பெரியார்தாசன் சென்னையில் காலமானார்
[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 09:09.53 PM GMT ]
ஈழப்போராட்டத்தின் பின்தளமாக தமிழ்நாட்டை ஈழப்போராளிகள் பயன்படுத்த தொடங்கிய ஆண்டுகளிலிருந்து ஈழத்திற்கான நியாயங்களை தமிழ்நாடெங்கும் எடுத்துரைக்கும் பரப்புரையாளராக செயற்பட்டவர் பெரியார்தாசன். ஈழப்போராட்ட அமைப்புகளில் ஒன்றான ஈழப்புரட்சி அமைப்பின் [EROS] ஆதரவாளரான அவர் புலம்பெயர்ந்த தமிழரிடையேயான பரப்புரைக்காக ஐரோப்பாவெங்கும் 1980களிலேயே சுற்றுப்பயணத்தை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோலவே இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னால் ஈழப்போராளிகள் தங்கள் பணியகங்களை மூடி தாயகம் திரும்பியபோது அவர்களுடன் கூடவே ஈழத்திற்கான பயணத்தை மேற்கொண்டு நாட்டு நிலைமைகளை மக்கள் வாழ்வியலை நன்கு அறிந்து கொண்டவர்.
இராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை பெற்றவர்களுக்கு ஆதரவாக அவர்களை விடுவிப்பதற்கான பரப்புரைகளில் இவரும் பங்கேற்றதுடன் வழக்கு நிதி சேகரிப்பிலும் முன்னின்று உழைத்தார்.
அண்மைக்காலமாக வைகோவின் தலைமையை ஏற்று மதிமுக கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக செயற்பட்டார்.
இவற்றுடன் இந்தியாவின் தேசிய விருதுபெற்ற `கருத்தம்மா' உட்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் பெரியார்தாசன் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரியார்தாசன் உயிருடன் இருக்கும் போதே தனது கண்களை தானம் செய்து இருந்தார். அதே போல் பெரியார்தாசன் விருப்பப்படி அவரது உடலும் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட இருப்பதாக அவரது மூத்த மகன் வளவன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment