Sunday, July 27, 2014

சவூதி சென்ற மகள் 8 வருடங்களாகியும் நாடு திரும்பவில்லை! மீட்டுத்தாருங்கள் என 70 வயது தாயார் மன்றாட்டம்!

சவூதி அரேபியாவுக்குச் வீட்டுப் பணிப்பெண்ணாக கடந்த 2006ம் ஆண்டு சென்ற தனது மகள் எட்டு வருடங்கள் கடந்த நிலையில் நாடு திரும்பவில்லையெனவும், மகளை மீட்டுத்தருமாறும் அப்பெண்ணின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த முஹம்மது ஹனீபா பிர்தௌஸியா (வயது 30) என்ற யுவதியே சவூதி அரேபியாவுக்கு கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 02ம் திகதி கொழும்பிலுள்ள ஹஸ்னா மேன்பவர் முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில்வாய்ப்புப் பெற்று சென்றுள்ளார்.
எனினும், எட்டு வருடங்களாகியுள்ள போதிலும் தனது மகள் ஒரு முறையேனும் நாடு திரும்பவே இல்லை என்று அப்பெண்ணின் தாயான சின்னலெப்பை ஆசியா உம்மா (வயது 70 தெரிவித்துள்ளார்.
இது விடயமாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவுக்கு 2013 ஜனவரி 16ஆம் திகதியன்று முறைப்பாடு செய்தபோது அடுத்த விநாடியிலிருந்தே தமது பணியகம் நடவடிக்கை எடுக்கும் என்று பத்திரம் ஒன்று தரப்பட்டது.
ஆனால் இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும், தனது மகள் விடயமாக எதுவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக மகளிடமிருந்து பணம் வருவது நின்று விட்டது என்றும் கடந்த ஒரு வருட காலமாக அவர் காணாமல் போயிருப்பதாகவும் குறித்த தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தனது மகளின் நிலைமை தொடர்பாகக் கண்டறியுமாறும் தனது மகளை மீட்டுத் தருமாறும் கோரியும், தான் ஏறாவூர் நகர, பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பிரிவுகளுக்குச் சென்று முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக நாளை மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcis7.html

No comments:

Post a Comment