Friday, April 12, 2013

19 வருடங்களின் பின்னர் மீண்ட மகள்: அதிசயம் !




வாழ்க்கையில் நிகழும் சில உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று கேள்விப்பட்டது உண்டு. ஆனால் இன்று தான் அதனை உணர்கிறோம் ! சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் வசித்துவந்த பொப்பி என்னும் 19 வயதுப் பெண் அடிக்கடி ஒரு சிறிய மனக் குழப்பத்தில் இருந்தார். அவர் சட்டக்கல்லூரி மாணவியாக இருக்கிறார். தனது பெற்றோர் வெள்ளை நிறத்தவர்கள். தன்னுடைய நண்பர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள், ஆனால் தான் மட்டும் எப்படி கறுப்பாக இருக்கிறேன் என்று அவருக்குள் நீண்ட காலமாக ஒரு குழப்பம் இருந்து வந்தது. இதனை அவர் தனது பெற்றோரிடம் கேட்கத் தயங்கினார். இருப்பினும் இறுதியாக தான் ஏன் கறுப்பாக இருப்பதாக அவர் கேள்வி எழுப்பினார். மகளின் கேள்வியால், அவளது தாய் ஜெனியும், தந்தை கிளிப்பும் திகைத்து போனார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் அவளிடம் உண்மையை கூறினார்கள். நீ எங்களுடைய சொந்த குழந்தையில்லை என்றும் இலங்கையிலிருந்தே உன்னை தத்தெடுத்தோம் என்று அவளிடம் கூறினார்கள்.

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் தாங்கள் இலங்கை தீவிற்கு சென்றதாகவும், குழந்தையில்லாத தங்களுக்கு ஒரு குழந்தையை தத்தெடுக்கும் ஆர்வம் ஏற்பட்டதாக கூறிய பொப்பியின் பெற்றோர் இலங்கையில் நுவரெலியா என்ற பிரதேசத்தில் லெட்சுமி என்ற பெண்ணுக்கு பிறந்த குழந்தையை தாங்கள் தத்தெடுத்து இங்கிலாந்துக்கு கொண்டு வந்ததாக கூறினார்கள். அன்றிலிருந்து இன்றுவரையிலும் தங்களது சொந்த குழந்தையாகவே அவளை வளர்த்தார்கள். எந்த பேதம் வித்தியாசமுமின்னிற் எல்லா வசதிகளையும் அவளுக்க செய்து தந்தார்கள். வளர வளரவே பொப்பிக்கு தனது நிற வேறுபாட்டை உணர ஆரம்பித்தாள். இதனைக் கேட்டு திகைத்து போன பொப்பி தனது உண்மை தாய் இருக்கிறாளா ? என்று தேடும் பாரிய முயற்சியில் உடனே இறங்கினார். 

தன் வளர்ப்பு பெற்றோர் மூலம் உண்மை தெரிந்த பொப்பி, தனது உண்மை தாயை கண்டு பிடிக்க ஆவல் கொண்டாள். அவளது (வளர்ப்பு) தாயும், தந்தையும்) அதற்கு சம்மதித்தனர். அவள் இலங்கை செல்ல ஏற்பாடு செய்தார்கள். இலங்கைக்கு தன் நண்பர்களுடன் வந்த பொப்பிக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஆங்கில ஆசிரியை சிவமதி சிவமோகன், அவரது நண்பர் சசிகுமார் ஆகிய இருவரும் உதவுவதற்கு முன் வந்தார்கள். முதலில் சசிகுமார் ரம்பொடவத்தை தேயிலை தோட்டத்திற்கு குழந்தையை தத்து கொடுத்த லெட்சுமி என்ற பெண்ணை தேடி போனார். ஆவரிடம் அந்த புகைப்படமும், தத்துகொடுத்த பத்திர பிரதியும் இருந்தன. அந்த தோட்டத்தில் லெட்சுமி என்ற பெயர் கொண்ட 19 பெண்கள் இருந்தார்கள். அதிலும் ஒரே குழப்பம். மனம் தளராத பொப்பிக்கு அவள் நீர்கொழும்பில் தங்கி இருந்த ஹோட்டலில் பணி புரியும் சுரங்க பெரேரா என்பவரும் உதவிக்கு வந்தார். இவர்கள் அனைவரும் இணைந்து தாயை தேட ஆரம்பித்தார்கள்.

அவரது ஏற்பாட்டின்படி பொப்பியும் அவள் நண்பர்களும் ரம்பொடவத்தையில் உள்ள புளுபீல்ட் தேயிலை தோட்டத்திற்கு வந்தனர். அங்கு அவள் தாய் லெட்சுமி வேலை செய்து வந்ததாக தெரியவந்தது. தோட்டத்தில் தனது தாயை தேடி அலைந்த பொப்பி இறுதியாக தனது தாய் லெட்சுமியைச் சந்தித்தார். 32 நாட்களேயான குழந்தையாக தன்னை பிரிந்த மகள், இன்று 19 வயது அழகிய இளம் யுவதியாக நின்றதை கண்ட அந்த தாய்க்கு சோகமும் மகிழ்சியும் கலந்த எண்ணங்கள் கண்களில் நீர்வழிய தாயும் மகளும் அரவனைத்து கொண்டனர். "அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்பார்கள். பிரித்தானியாவில் வழந்த பொப்பி என்னும் இத் தமிழ்ப் பெண்ணுக்கு தமிழ் தெரியாது. இதேவேளை லெட்சுமிக்கோ ஆங்கிலம் தெரியாது. ஆனால் அன்பு மட்டுமே அங்கே வார்த்தைகளாகப் பெருகியது. ஊரே திரண்டு இவ்விருவரையும் பார்த்து அதிசயித்துப் போனார்கள். மொழியால் பேசிக்கொள்ள முடியாத அவர்கள் தங்கள் அரவனைப்பால் தங்கள் உணர்ச்சிகளை கொட்டினார்கள்.

இன்று மீண்டும் பிறந்ததாக உணர்கிறேன் என்றாள் பொப்பி. தன் மகளை பிரிய வேண்டிய நிர்ப்பந்தத்தை விளக்கினார் 'கலிங்க லெட்சுமி' என்ற அந்த தாய்:

ஏற்கனவே எனக்கு இரு குழந்தைகள். இரண்டுமே பெண்கள். அந்த நிலையில் நான் மீண்டும் கர்ப்பமானேன். அப்போதுதான் என் குழந்தைகளின் தந்தை இறந்துபோனார். நிர்க்கதியான நான் எனது கடைசி குழந்தையாவது எங்காவது நலமாக வாழட்டும் என்றுதான் தத்துக்கொடுக்க சம்மதித்தேன். என் குழந்தையை நான் நினைக்காத நாளில்லை. இப்போது இவ்வளவு காலம் கழித்து அவளை காண்பது ஒரு கனவுபோல இருக்கிறது என்றாள் அந்த தாய் ! பொப்பின் மகிழ்ச்சியோ அளவிட முடியாதது. இப்போது தனக்கு இரண்டு தாய்கள் என்று சொல்லி மகிழ்ந்தாள். தனது உண்மை தாயை இறுதி வரை காப்பாற்றுவேன் என்றார். இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளியாக இருந்த லெட்சுமி, இனியாவது ஒரு நல்ல வாழ்க்கைக்குள் செல்லவேண்டும். கஷ்ட்டங்கள் அனைத்தும் நீங்கி, நலமாக வாழவேண்டும். பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திக்கும் நேரம் என்பது ஒரு பொன்னான நீரம் அல்லவா !




வல்லிபுரத்தான்.


No comments:

Post a Comment