அம்பாறை மாவட்டத்தில் அட்டப்பள்ளத்தை அடுத்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் அதிசய ஐந்துதலை நாக கமுகு மரம் திடீரென உருவாகியுள்ளது.
ஆலய கிணற்றடியில் பல கமுகு மரங்கள் உள்ளன. ஒரு வித்திலைத் தாவரமான கமுகு, தென்னை போன்ற மரங்கள் நார்வேருடன் ஒரு தண்டையே கொண்டிருக்கும். அவ்வாறே அங்குள்ள மரங்களும் ஒற்றைத் தண்டுடனேயே காணப்பட்டன.
அவற்றில் ஒரு மரத்தின் உச்சி மட்டும் 05 கிளைகளாக பிரிந்து ஐந்து தலை நாக வடிவில் உள்ளது. அதுவும் சடுதியாக ஏற்பட்ட மாற்றமென ஆலய நிருவாகி காரைதீவைச் சேர்ந்த கோ.கமலநாதன் கூறுகிறார்.
அண்மையில் பட்டப்பகலில் அம்மன் வந்து இம்மரத்தடியில் வந்தமர்ந்து அன்னதானம் வழங்கிய சட்டி பானைகளைக் கழுவிக் கொண்டிருந்தாராம். இதனைச் சடுதியாக அங்கிருந்த பக்தர் ஒருவர் கண்டிருக்கிறார். மறுகணம் அம்மன் இருந்த இடம் தெரியாமல் மறைந்தார்.
அன்றிரவு அவர் கனவில் தோன்றி 5 தலை நாக வடிவில் கமுகு மரம் கிளை விட்டிருப்பதைப் பாரும் என்றிருக்கிறார்.
ஆம் என்ன அதிசயம். மறுநாள் வந்து பார்த்ததும் கமுகு மரத்தில் அவ்வடிவம் காணப்பட்டதாம்.
இன்றும் அவ் வடிவம் உள்ளது. அதனையே இங்கு காண்கிறார்கள்.
இயற்கையாக கழனிகளுக்கு மத்தியில் தென்னஞ்சோலைக்குள் பாரிய ஆலமர நிழலில் பாம்புப் புற்றுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இவ்வாலயத்திலுள்ள புற்றொன்றில் திடீரென அண்மையில் சிவலிங்கமொன்று தோன்றியதையடுத்து பக்த வெள்ளம் அலைமோதத் தொடங்கியமையை தெரிந்ததே.
இப்படியாக இடையிடையே சில அற்புதங்களும் இடம்பெற்று வருகின்றன.
நாக பாம்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இவ்வாலயத்திற்கு மின்சாரமில்லாதது பிரதான குறைபாடாகவுள்ளது.
ஆலயத்திற்குச் செல்லும் பாதை கூட முதலையின் தோல் போல் ஒடுங்கிக் காணப்படுகிறது. எனவே பாதை சற்று அகலமாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
படங்கள், தகவல்கள்: காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
No comments:
Post a Comment