Wednesday, February 22, 2012

ஆசிரியர் சித்திரவதை செய்ததால் யு.கே.ஜி மாணவன் மரணம்!!


வீட்டுப்பாடம் செய்யாததால் யு.கே.ஜி மாணவனை பள்ளி கழிப்பறையில் பல மணி நேரம் அடைத்து வைத்து ஆசிரியர் சித்ரவதை செய்தார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான்.
அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தின் கமேலா நகரில் உள்ள ராஜ்குல் சீனியர் பள்ளியில் வேலைபார்த்து வருகிறார். அந்த பள்ளியில் 6 வயதான பங்கஜ் யு.கே.ஜி படித்து வந்தான். அவனது அண்ணன் சாகரும் அதே பள்ளியில் படித்து வந்தான்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி பள்ளிக்கு சென்ற பங்கஜ் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வகுப்பாசிரியர் அவனை பள்ளி கழிப்பறையில் தள்ளி பூட்டினார்.
அச்சிறுவன் இனிமேல் வீட்டுப்பாடத்தை மறக்காமல் செய்துவிடுகிறேன் என்று கதறி அழுதான். கழிப்பறையில் அடைத்த ஆசிரியர் அதனை மறந்துவிட்டார். நாள் முழுவதும் கழிப்பறையில் அவன் அடைத்து வைக்கப்பட்டான்.
மாலையில் பள்ளி முடிந்ததும் பள்ளிப் பேருந்து புறப்படுகையில், தனது தம்பி பங்கஜ்ஜை காணவில்லை என்று சாரதியிடம் அச்சிறுவனின் அண்ணன் சாகர் கூறியுள்ளான்.
இதையடுத்து பள்ளியில் தேடியபோது, கழிப்பறையில் பங்கஜ் அடைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, கதவை திறந்து அவனை மீட்டனர்.
வீட்டுக்கு சென்ற பங்கஜ், நாள் முழுவதும் கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 55 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பங்கஜ் கடந்த 19ம் திகதி இறந்தான்.
தங்கள் மகனின் சாவுக்கு ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் தான் காரணம் என்று பங்கஜின் பெற்றோரான ஜெய்வீர் சிங், ரீனா ஆகியோர் புகார் கூறியுள்ளனர். ஆனால், நோய் காரணமாகத்தான் பங்கஜ் இறந்தான் என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment