Thursday, January 26, 2012

காணாமல் போன தமிழ் யுவதி எலும்புக்கூடாக மீட்க்கப்பட்டார் !



தென்மராட்சியின் தனங்களப்பு பகுதியில் காணாமல் போயிருந்த யுவதியொருவர் இரண்டு மாதங்களின் பின்னர் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். 28 வயதான சுப்பிரமணியம் அற்புதமலர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் நவம்பர் 13ஆம் திகதியளவில் இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றவேளை காணாமல் போயிருந்ததாக குடும்பத்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காணாமல் போனது தொடர்பில் அவர்கள் பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளையும் செய்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட அறுகுவெளி-கேரதீவு பகுதியில் வேட்டைக்கு சென்ற சிலர் கைவிடப்பட்ட இராணுவ மண் அணை ஒன்றினை அண்மித்த பகுதியில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு கூட்டுத்தொகுதிகளை இன்று காலை கண்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சாவகச்சேரி நீதிவான் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவ்வேளையிலேயே காணாமல் போயிருந்த யுவதி கடைசியாக அணிந்திருந்த ஆடைகளை வைத்து குடும்பத்தவர்கள் சடலத்தை அடையாளங்காட்டியுள்ளனர். மீடக்கப்பட்ட சடலம் நீதிபதியின் உத்தரவு பிரகாரம் யாழ்.போதனாவைத்தயசாலையின் பிரேத அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


No comments:

Post a Comment