Tuesday, September 20, 2011

நாங்கள் சொல்வதை மட்டும் எழுதுங்கள்!! கிறீஸ் மனிதன் தொடர்பாக இராணுவத்தினர்!!


(படங்கள் இணைப்பு)
சாவகச்சேரி கனகம்புளியடிப் பகுதியில் பற்றைக்குள் நின்றார், இராணுவத்தினர் துரத்தியபோது ஓடினார் என்ற காரணத்திற்காக இளைஞர் ஒருவரை மர்மமனிதன் என கூறி படையினர் பிடித்து நையப்புடைத்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் படையினர் தெரிவித்தவையாவது,

மேற்படிப் பகுதியில் 7.45மணியளவில் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இளைஞர் ஒருவர் பற்றைக்குள் நின்றிருந்ததை படையினர் கண்டுள்ளனர்.

பின்னர் அவரைத் அழைத்தபோது அருகில் வரவில்லை, அங்கிருந்து அருகிலுள்ள படைமுகாமை நோக்கி ஓடினார். அதனால் படையினர் அவரைத் துரத்திப் பிடித்து விசாரணைக்குட்படுத்தியபோது அவர் மர்மமனிதன் விவகாரத்துடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததாக தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இளைஞரின் உறவினர்கள் தெரிவிக்கையில் சுமார் 15 வருடகாலமாக துவிச்சக்கரவண்டி திருத்தும் கடையொன்றை அவர் வைத்திருந்ததாகவும், காலையில் கடைக்கு தூண் அறுப்பதற்காக சல்லிக்கல்லும், சீமெந்தும் வாங்க கடைக்குச் சென்றிருந்தார், அப்போதே படையினர் அவ்வாறு அவரைப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

மேலும் குறித்த இளைஞரை நிர்வாணப்படுத்தி அவர் மீது படையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் ஒரு அப்பாவி எனவும் காலைக் கடன் முடிப்பதற்காகவே அவர் பற்றைக்குள் சென்றிருப்பார். இயற்கையிலேயே படையினர் மீது அவருக்கு பயம் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர் ரா.காண்டீபன் (வயது28) என்பவர் தற்போது சாவகச்சேரி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் குறித்த இளைஞருக்கு மர்ம மனிதன் பெயரும் முன்னாள் போராளி பட்டமும் சூட்ட படையினர் மிகுந்த கஸ்டப்பட்டு குடாநாட்டு ஊடகங்களை சம்பவ இடத்திற்க்கு அழைத்துச் சென்றுள்ளனர்.







18 Sep 2011

No comments:

Post a Comment