Friday, June 1, 2018

புலம்பெயர் நாடுகளில் ரஜினிகாந்த் படத்திற்கு வெடித்தது சர்ச்சை! படத்தின் நிலை என்ன?

கடந்த வாரம் தமிழகத்தை மாத்திரம் அல்லாது தமிழர் வாழும் பகுதிகளில் எங்கிலும் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த விடயம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவம்.
பலரின் உரியை குடித்த கோர துப்பாக்கிச்சூட்டு சம்பவமாக இது பார்க்கப்பட்டதுடன், பல எதிர்ப்புக்களை கிளப்பிவிட்டிருந்தது இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு விஜயம் மேற்கொண்டிருந்துடன், அங்கிருந்த இளைஞர் ஒருவர் ரஜினிகாந்த்தை பார்த்து யார் நீங்கள் என்று வினவியிருந்தமை அடுத்த கட்ட அதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது.
அதனை அடுத்து ரஜினிகாந்த் வெளியிட்ட கருத்துக்கள் மீண்டும் ஒரு சர்ச்சைக்கு கொண்டு சென்றுள்ளது.
சமூக விரோதிகளின் ஊடுருவலே கலவரத்திற்கு காரணம். போராட்டம் நடைபெற்றால் தமிழகம் சுடுகாடாக மாறும் என்ற ரஜினியின் கருத்துக்களால் உலக வாழ் தமிழர்கள் உச்சக்கட்ட வெறுப்படைந்துள்ளார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், தூத்துடிக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மேற்கொண்ட மக்களை தீவிரவாதிகள் என்று ரஜினிகாந் ஊடகவியலாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்து வெளிவருகின்ற 'காலா' என்ற திரைப்படத்தைப் புறக்கணிப்பதற்கு நோர்வே வாழ் தமிழர்கள் தீர்மாணம் எடுத்திருந்தார்கள்.
இதன்படி தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம் எனவும் குறிப்பாக ரஜினியின் படத்தை நோர்வேவில் திரையிட மாட்டோம் என நோர்வே தமிழ் திரைப்பட விழா குழு அறிவித்துள்ளத.
இது தொடர்பில் நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவின் இயக்குனர் வசீகரன் சிவலிங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில்,
நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்!
எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது. அப்படிப் புலம்பெயர்ந்த நாங்கள் எமது மொழியோடு, கலை கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, வலிகளையும் சுமந்த வண்ணம் இங்கே வாழ்ந்து வருகின்றோம். தமிழ்த் திரைப்படங்களின் வர்த்தக முதலீட்டின் பெரும் பங்காளர்களாக இருக்கின்றோம்.
எமது மக்களை மகிழ்விப்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த எடுக்கின்ற சிறந்த முடிவு இது.
எமது மக்களிடம் இருந்து பெரும் கோடிகளைப் பணமாகவும், ஊதியமாகவும் பெற்று வந்த பெரிய நடிகர் ரஜனிகாந்த். அவருடைய அண்மைக்கால அரசியல் வருகையும், ஆன்மீக அரசியல் நிலைப்பாடும் எமக்கு அதிருப்தியைத் தொடர்ந்து தருகின்றது.
கடந்த சில மாதங்களாக அவருடைய "ஆன்மீக அரசியலின் அகோர முகத்தை" 30.05.18 அன்று கொடும் கறுப்பாகவே அனைத்து தமிழக ஊடகங்களிலும் பார்த்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தோம்!
கடந்த 22.05.18 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த தமிழர்கள் மீதான, இந்திய அரசின் படுகொலைக்கு ரஜனி அவர்கள் எதிர்ப்பான குரல் ஏதும் பெருங் கோபத்துடன் பதிவு செய்யப்படவில்லை!.
எமது 13 மேற்பட்ட இனிய தமிழ் உறவுகளின், அற்புதமான உயிர்களின் சாவீட்டில் "ஒரு நடிகனாக போனால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்" என்று மிகவும் கீழ்த்தனமான சிந்தனையில் தன்னை வெளிப்படுத்திய இவரின் சிந்தனையை வன்மையாக கண்டிக்கின்றோம்!
இவற்றின் வெளிப்பாடாக நோர்வே நாட்டில் இனிமேல் தமிழர்களை, தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம்.
இத்தனை வருடங்களாக, எவ்வளவு பெரிய இனப்படுகொலைகளுக்குப் பின்பும் ஈழத்தனுக்காக குரல் கொடுக்காத நடிகர் ரஜனிகாந்த் இன்று தமிழ் நாட்டு மக்களை, அவர்களுடைய உணர்வுகளை, போராட்டங்களை தொடர்ந்து போராடிவரும் மக்களை வார்த்தைகளால் நோகடித்தும், சாகடித்தும் வருகின்றார்!
தமிழகத்தையும் சுடுகாடாய் மாற்றும் இந்திய அரச இயந்திரங்களோடு அவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்திவரும் ஒருவர் சொல்கிறார் " போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ் நாடே சுடுகாடாகுமாம்" எவ்வளவு பெரிய கொடுமையான வார்த்தை!
இவருடைய திரைப்படங்களை, இவரைப் போன்று தமிழர்கள் மீதான வன்மத்தை வெளிக்காட்டும் எந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உடைய திரைப்படங்களையும் இனிமேல் இங்கே திரையிடமாட்டடோம்!
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களை இங்குள்ள நண்பர்களுடன் இணைந்து திரையிட்டு வந்தேன். "காலா" திரைப்படத்தில் இருந்து சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் காலம் வந்து விட்டது!
இப்போது நாங்கள் இணைந்தே திரைப்படங்களை இங்கே திரையிடுகின்றோம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்த இதற்கு எனது நண்பர்களும் முழு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்கள்!
விசேடமாக ஐரோப்பிய வாழ் தமிழர்கள் நாம் முதலில் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க பாடத்தை ரஜினிக்கு புகட்டுவோம் !
உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக விழித்தெழவேண்டும்! உலகம் முழுவதும் தமிழர்களாய் ஒன்றிணைவோம்! என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்களும் 'காலா' திரைப்படத்தைப் புறக்கணிப்பது என்று தீர்மானம் எடுத்துள்ளார்கள்.
காலா திரைப்படத்தை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற பிரச்சாரங்கள் சமூகவலைத் தளங்கள் வழியாகவும், குறுஞ்செய்திகள் ஊடாகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

http://www.tamilwin.com/community/01/184267?ref=imp-news

No comments:

Post a Comment