Monday, June 18, 2018

பொலிஸாரினால் கொடூரமாக கொல்லப்பட்ட சகோதரன்! யாழில் தவிக்கும் இரு சகோதரிகள்


யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த 34 வயதான மேசன் தொழிலாளியான பாக்கியராஜா சுதர்சன் என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவராவார்.
இரு சகோதரிகளுடனும், நோய்வாய்ப்பட்டுள்ள தந்தையுடனுமே இவர் வசித்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த சுதர்சனின் முன்பக்க வலது இடுப்பினூடாக உள்நுழைந்த துப்பாக்கி ரவை, அவரது நுரையீரலில் அடிப் பகுதியைத் தாக்கியவாறு வெளியேறியுள்ளது.
அவரின் சடலம் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் சகாயமாதா ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற இளைஞர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தின் திருவிழா நேற்று மாலை இடம்பெற்றது. மாலை 6.45 மணியளவில், சுன்னாகத்திலிருந்து சுமார் 6 தொடக்கம் 8 உந்துருளிகளில் வாள்களுடன் இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஒருவரைத் துரத்தி வந்துள்ளனர். வாள்களுடன் இளைஞர்களால் துரத்தப்பட்டவர், ஆலயத் திருவிழாக் கூட்டத்தினுள் புகுந்துள்ளார்.
வாள்களுடன் உந்துருளியில் வந்த இளைஞர்கள் ஆலயத்தின் முன்பாக நின்றிருந்தனர். ஆலயத் திருவிழாவில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் வீதிக்கு வந்துள்ளார். வீதியில் வாள்களுடன் நின்றிருந்த இளைஞர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது, ஆலயத் திருவிழாவுக்கு வந்திருந்த, பாக்கியராஜா சுதர்சன், வாள்களுடன் நின்றிருந்த இளைஞர்களின் தாக்குதலிருந்து தனது உறவுமுறை இளைஞனைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
அந்த நேரத்தில், முச்சக்கர வண்டியில் சுன்னாகம் பொலிஸார் பயணித்துள்ளனர். அவர்கள் ஏழாலையில் நடந்த திடீர் உயிரிழப்பு தொடர்பாக விசாரிக்கவே அந்தப் பகுதிக்கு வந்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, முச்சக்கரவண்டியிலிருந்து இறங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள், அடி வாங்கிக் கொண்டிருந்த இளைஞனை நோக்கி துப்பாகியால் சுடமுற்பட்டுள்ளார். பாக்கியராஜா சுதர்சன் அடிவாங்கிக் கொண்டிருந்த இளைஞனை காப்பாற்ற முயற்சித்துள்ளார். இதன்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சுதர்சன் சம்பவ இடத்தில் அவலக் குரல் எழுப்பியவாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வாள்களுடன் வந்த இளைஞர் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. முச்சக்கரவண்டியில் வந்த மற்றைய பொலிஸாரும் அங்கிருந்து சென்றுள்ளார். துப்பாக்கியால் சூடு நடத்தியத பொலிஸாரை சிறிது நேரத்தில் அங்கு சிவில் உடையில் வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டையடுத்து கொதித்தெழுந்த இளைஞர்கள் காங்கேசன்துறை வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
உயிரிழந்த இளைஞனின் சடலம், தெல்லிப்பழை வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மல்லாகம் மாவட்ட நீதிபதி அ.ஜூட்சன், சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டதுடன், வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தையும் பார்வையிட்டார்.


http://www.tamilwin.com/community/01/185815?ref=home-imp-parsely

No comments:

Post a Comment