Saturday, June 2, 2018

செங்காலன் கதிர்வேலர் சித்திரத்தேர் பவனி நிகழ்வு

செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சித்திரத்தேர் பவனி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நாளை கதிர்வேலர் சித்திரத்தேரிலேறி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கவுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வரும் மகோற்சவத்தில் இன்று கதிர்வேலர் சப்பறத்தில் வெளிவீதி வலம் வந்து காட்சியளித்து, நாளைய தினம் அபிசேகம், வசந்தமண்டபப் பூஜைகள் நடைபெறவுள்ளன.
பெரும் எண்ணிக்கையானோர் காவடி எடுத்தும், அங்கப்பிரதட்தட்சணம் செய்தும், அடி அழித்தும், கற்பூரச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திகளை நிறைவு செய்வர். தேர் உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஆலயத்தலைவர் வே.கணேசகுமார் தலைமையினாலான நிர்வாகத்தினரும், பரிபாலன குழுவினரும் இளம் தொண்டர்களும் சிறப்புற செய்துள்ளனர்.

தாகசாந்தி நிலையங்களும்,வர்த்தக நிறுவனங்களின் அங்காடிகளும் விசேடமாக அமைக்கப்படடுள்ளன. தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதி கருதி விசேட ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டுள்ளன.
தேர்த்திருவிழாவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சிடரான சுவாமி ஜோதிர்மயா கலந்து சிறப்புரை ஆற்றவிருக்கிறார் மகோற்சவ காலத்தில் புதன்கிழமை மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கதிர்வேலர் வள்ளி, தெய்வானை சமேதராக மாம்பழ வடிவிலான அலங்காரத்துடனும் சிவன் பார்வதி சகிதமாகவும் பிள்ளையார் தனியாகவும் வலம் வந்தனர்.
மாம்பழம் பகிர்ந்தளிக்கும் விழாவான மாம்பழத்திருவிழா தத்துவரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிவனிடம் மாம்பழத்தைப் பெறுவதற்காக கதிர்வேலர் எல்லா இடமும் சுற்றி வருவதற்குள் பிள்ளையார் சிவன் பார்வதியை வலம் வந்து மாம்பழத்தைப் பெற்றுக்கொள்ளும் காட்சி பார்க்க சிறப்பாக இருந்தது.

இந்த விழாவின் தத்துவவிளக்கம் அங்கு வழங்கப்பட்டது. இறுதியில் பக்தர்கள் அனைவருக்கும் மாம்பழம் வழங்கப்பட்டது. மறுநாளான வியாழக்கிழமை வேட்டைத்திருவிழா வெளிவீதியில் சிறப்பாக இடம்பெற்றது.
வேட்டைத்திருவிழாவின் வரலாற்றுக் கதைகளை சிவநெறிச் செல்வர், சைவசித்தாந்த ஜோதி, சைவசித்தாந்த சிரோன்மணி ஆறுமுகம் செந்தில்நாதன் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.
எட்டுக்குடி என அழைக்கப்படும் முருகனின் வேட்டையை தத்துவரூபக் காட்சியாகக் காண்பிக்கப்பட்டது. மறுநாள் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் கதிர்வேலர் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 9ஆம் திருவிழாவான நாளை தேர்த்திருவிழா பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது.

பக்தர்களுக்கு வசதியாக வேலைநாள், பள்ளிக்கூடநாள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இறுதிநாள் திருவிழாக்களில் விசேட இசைநிகழ்ச்சி நிர்வாகத்தினரால் தவிர்க்கப்பட்டிருந்தது.
ஆலய நிகழ்ச்சிகளை பக்தர்கள் எங்கிருந்தாலும் பார்க்க வசதியாக ʺயூரியூப்ʺ(youtube) ஊடாக நேரடியாக திருவிழா நிகழ்வுகள் அஞ்சல் செய்யப்பட்டு வருகிறது. முதல் தடவையாக இந்த வருடம் இந்த வசதி ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






http://news.lankasri.com/swiss/03/180184?ref=ls_d_swiss

No comments:

Post a Comment