Sunday, May 13, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை மிக கவலையளிப்பதாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது என இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு கிழக்கில் கடந்த முப்பது வருட யுத்த காலப்பகுதியில் பல சொல்லொணா துன்பங்களுக்கு மத்தியில் நாட்டைவிட்டு ஓடாமல் எமது இனத்தின் வேர்களான மாணவச் செல்வங்களுக்குப் பெரும் சேவையாற்றி தன்னையும் தனது குடும்பத்தையும் ஆகுதியாக்கியவர்கள் எமது தமிழ் இளைஞர்கள்.
பல்கலைக்கழகங்களில் கலாநிதிப் பட்டங்கள் பெற்று வெளிநாடுகளுக்குச்சென்று கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் மத்தியில் எமது தொண்டராசிரியர்களின் பணி அளவிட முடியாதது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்போதைய நேர்காணல் முடிவுகள் தொண்டர் ஆசிரியர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது.
தமிழ் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களுக்காக பத்து வருடங்களுக்குமேல் பணியாற்றிய தொண்டராசிரியர்களை ஏதோ காரணங்களைக் கூறி வெட்டியகற்றிவிட்டு அதே தமிழ் பாடசாலைகளுக்கு அராஜகமாக முஸ்லிம் ஆசிரியர்களை நியமிப்பதென்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை.
இது வெறுமனே ஒரு ஆசிரியர் நியமனத்தோடு சம்பந்தப்பட்ட விடயமாகத் தெரியவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுடைய அடையாளங்கள், சமூக கட்டமைப்பு, இனப்பரம்பல், அரச நிர்வாகத்தில் தமிழரின் வகிபாகம் இவை அனைத்தையும் மாற்றியமைக்கும் எண்ணமுடைய சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் கைங்கரியமாக இது தெளிவாகத் தெரிகின்றது.
இதனை இந்து சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த அராஜகத்தை அரசாங்கத்துடன் உடனடியாகப் பேசி தற்போதைய தெரிவுகளை இரத்துச் செய்துவிட்டு மீண்டும் நேர்முகப் பரீட்சை நடாத்தி பாதிக்கப்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக நேர்முகப்பரீட்சை நடாத்தும் அதிகாரிகள் இன ரீதியாகவன்றி திணைக்கள ரீதியாக சம அளவில் நியமிக்கப்பட்டு நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட வேண்டும்.
இது ஒரு பாரதூரமான விடயம். எந்தெந்த விடயங்களில் விட்டுக்கொடுப்ப தென்பதற்கு எமது தலைவர்களுக்கு வரைவிலக்கணமே இல்லாமல் போய்கொண்டிருப்பது வேதனையாக இருக்கின்றது.
இவ்விடயத்தில் கூட்டமைப்பு தோல்வியடையுமானால் எதிர்வரும் தேர்தல்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட தொண்டர்களைக் கொண்ட எமது அமைப்பு களம் காணும்.
இது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் வழங்கும் எச்சரிக்கையாக கூட எடுத்துக் கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/community/01/182543?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment