Friday, December 29, 2017

தீவிரமாக தேடப்படும் இலங்கை தமிழ் அகதி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!


யாழ். சாவகச்சேரி நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய Interpol உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருந்த நிலையில், குறித்த நபர் தலைமறைவாகி உள்ளார் என தமிழ் நாடு மண்டபம் ஈழத்தமிழர் அகதிகள் முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு இந்திய தூதுரகத்தின் ஊடாக மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த நபர் தலைமறைவாகி உள்ளதுடன், அவர் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
“இலங்கை - காரைநகர், வாரிவளவை பிறப்பிடமாக கொண்ட கதிர்வேலு தயாபரராஜ் என்ற குறித்த நபர், விடுதலைப் புலிகளின் “வன்னி ரெக்” என்ற கணினிக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றியவர்.
2008 காலப்பகுதியில் தயாபரராஜ் வன்னி ரெக்கின் அதிபராக இருந்த காலத்தில் யாழ்.சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட உதயகலா என்ற போராளியை விரும்பி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனிடையே சில பிரச்சனைகள் காரணமாக தயாபரராஜுக்கு தண்டனை வழங்கப்பட்டு அவர் தண்டனையை அனுபவித்து வந்துள்ளார்.
இதனிடையே அவருடைய மனைவி உதயகலா என்பவர் “தான் கர்ப்பிணியாக இருப்பதாகவும், தனது சகோதரியின் ஆண் குழந்தை ஒன்றை தான் வளப்பதாகவும், தயாபரராஜ் தண்டனையில் இருப்பதால் குழந்தை பிறக்கும் காலப்பகுதி வரை தனக்கு பண உதவி செய்யும் படியும்” தயாபரராஜின் நண்பர் ஒருவருக்கு தகவல் அனுப்பி பெருந்தொகை பணத்தினை பெற்றுள்ளார்.
கர்ப்பிணியாக இருப்பதை காரணமாக்கி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளார்.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சித்திரை வருடத்திற்கு அண்மித்த நாட்களில் தயாபரராஜ் இராணுவத்திடம் சரணடைந்த செய்தி இலங்கை பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் வந்திருந்தது.
இந்த நிலையில் வவுனியாவில் இருந்து உதயகலா மீண்டும் நண்பர்களைத் தொடர்பு கொண்டு பண உதவி கேட்டு இருந்தார்.
நண்பர்களும் ஒரு தொகை பணத்தை அவருக்கு அனுப்பி வைக்க தாங்கள் அகதி முகாமில் இருப்பதாகவும் விரைவில் அதை விட்டு வெளியில் வர இருப்பதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் தயாபரராஜ் கைது செய்யப்பட்டதாகவும் அவரை மீட்பதற்கு இலங்கை புலனாய்வுத்துறைக்கு பெருந்தொகை பணம் தேவையென்றும் மேற்கு நாடுகளில் உள்ளவர்களிடம் பணத்தினை பெற்றுள்ளார்.
பணம் கிடைத்ததும் கணவனை இராணுவத்தினர் கொன்று விட்டார்கள் என்று நாடகமாடியும் பணத்தினை பெற்றுள்ளார்.
பின்னர் வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவராக தம்மை அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் பண மோசடி செய்துள்ளனர்.
பின்னர் பெருந்தொகை பணத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு தயாபரராஜ் அவரது மனைவி உதயகலா மற்றும் அவர்களது 3 குழந்தைகள் அகதிகளாக சென்றுள்ளனர்.
இவர்கள் கடவுச்சீட்டு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சில அரசியல் பிரமுகர்களை தொடர்பு கொண்டு தாம் போராளிகள் எனவும் தம்மை பொலிஸார் துன்புறுத்துவதாகவும் நாடகமாடியுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக கடந்த வருடம் மக்கள் நலக் கூட்டமைப்பினர் மதுரையில் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியிருந்தனர்.
பின்னர் விடுதலையாகிய இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்தார்கள்.
இந்த நிலையில் சாவகச்சேரி நீதிமன்றில் பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு குறித்த உத்தரவு இந்திய தூதுரகத்தின் ஊடாக மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
எனினும், இத்தனை குற்றச்சாட்டுக்களுடனும் தொடர்புடைய கதிர்வேலு தயாபரராஜ் மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகியோர் தலைமறைவாகி உள்ளதாக தமிழ் நாடு மண்டபம் ஈழத்தமிழர் அகதிகள் முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்..









http://www.tamilwin.com/community/01/169405?ref=home-imp-parsely

No comments:

Post a Comment