Friday, December 1, 2017

ப்ரூஸ்லீ இறப்பிற்கு யார் காரணம்?... வெளிச்சமாகிய மர்மத்தின் ரகசியம்


ப்ரூஸ்லீ என்றாலே நினைவிற்கு வருவது குங்ஃக்பூ, டிராகன் மற்றும் அவரது தற்காப்பு கலை. இன்றும் குங்ஃக்பூ மற்றும் கராத்தேவிற்கு வித்தியாசம் தெரியாதவர்களுக்கு கூட, தனது வித்தியாசமான கத்தும் சப்தத்துடன் ப்ரூஸ்லீ எதிராளியை உதைத்து வீழ்த்தும் முறை நன்கு தெரியும். அந்த கத்தல் ப்ரூஸ்லீயின் இலட்சினை என்றே கூறலாம்.

மிக குறைந்த காலத்தில் உச்சம் தொட்ட நாயகன். மிக குறைந்த வயதிலேயே மரணம் அடைந்து தனது உலக ரசிகர்களை அதிர்ச்சிக்குள் ஆக்கினார். இவரது திடீர் மரணத்தை சுற்றி பல மர்மங்கள் இருந்தன. இவரது மரணத்திற்கான உண்மை காரணம் என்ன என்பது இன்று வரை தெளிவுப் படாமல் இருந்தது. அதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது.

ப்ரூஸ்லீயின் வேகத்திற்கு ஈடிணையாக இன்று வரை யாரும் பிறக்கவில்லை என்று தான் கூறவேண்டும். தற்காப்பு கலை பயின்றவராக இருப்பினும், அந்த கலையின் அடிப்படையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தி அதன் மூலமாகவே பல திகைப்பூட்டும் செயல்கள் நிகழ்த்தினார் ப்ரூஸ்லீ.

ப்ரூஸ்லீயின் நீண்ட நாள் ரசிகர்ளுக்கு கூட அவரது உண்மையான பெயர் என்னவென்று தெரியாது. ப்ரூஸ்லீயின் இயற்பெயர் லீ ஜுன்-ஃபேன் என்பதாகும். ப்ரூஸ்லீ தற்காப்பு கலைகளில் மட்டும் கைதேர்ந்தவர் அல்ல. இவர் ஒரு சிறந்த கவிஞரும் கூட. மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே இவர் எத்தனை புலமை வாய்ந்த கவிஞர் என்பது தெரியும்.

ப்ரூஸ்லீயின் பல அடிகள் விசித்திரமாக இருக்கும். அதில் மிகவும் பிரபலாமான ஒன்று ஒன்-இன்ச்-பன்ச். வெறும் ஒரு அங்குல இடைவேளையில் தனது எதிராளியை அடித்து வீழ்த்தும் வித்தையை கற்றிருந்தார் ப்ரூஸ்லீ. இதை முதன் முதலாக 1968ல் கலிபோர்னியாவின் லாங் பீச்சில் நடந்த சர்வதேச கராத்தே டோர்னமென்ட்டில் நிகழ்த்தி பார்வையாளர்களை, போட்டியாளர்களை அசத்தினார் ப்ரூஸ்லீ. இதன் மூலம் மிக குறுகிய காலத்தில் மிகவும் பிரபலாமானார் ப்ரூஸ்லீ.

ப்ரூஸ்லீயால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு அவரது நுன்ஜாக் கலையே சான்று. தனது இந்த திறமையின் மூலம் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளார் ப்ரூஸ்லீ.

ஆனால், ஓர் மாலை திடீரென ப்ரூஸ்லீ இறந்துவிட்டார் என வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என சந்தேகித்தனர்.

ப்ரூஸ்லீ சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல. நிஜ வாழ்விலும் பெரிய ஹீரோ தான். நிஜத்திலும் அவர் திருடர்களை விரட்டிப் பிடித்து அடித்து துவம்சம் செய்துள்ளார். குறுகிய காலகட்டத்தில் எந்த ஒரு நடிகருக்கும் அப்படி ஒரு இரசிகர் படை உலகெங்கிலும் உருவானது இல்லை. ப்ரூஸ்லீ இந்த வளர்ச்சியின் மீது பலரும் பொறாமை கொண்டிருந்தனர் என கூறப்பட்டது.

ப்ரூஸ்லீயின் காதலியே அவருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டார் என்றும். சீனாவை சேர்ந்த ஒரு இரகசிய ஏஜென்சி தான் ப்ரூஸ்லீயை கொன்றது என்றும், ப்ரூஸ்லீயின் வளர்ச்சியை விரும்பாத ஹாலிவுட் வட்டாரத்தில் இருந்து சிலர் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன் விளைவே ப்ரூஸ்லீயின் மரணம் என்றும், பல மர்மங்களும், புரளிகளும் பல காலம் நீடித்திருந்தது.

ஆனால், ப்ரூஸ்லீயின் மரணத்திற்கு உண்மையான காரணமாக அறியப்படுவது அவரது பெருமூளை வீக்கம் (Cerebral Edema). ஆம்! பலமுறை ப்ரூஸ்லீ திரைப்படப் படப்பிடிப்பு தளங்களில் மயங்கி விழுந்துள்ளார். ப்ரூஸ்லீக்கு பெருமூளை வீக்கம் என்ற பிரச்சனை இருந்துள்ளது. அடிக்கடி ப்ரூஸ்லீக்கு தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த பெருமூளை வீக்கம் இருக்கும் நபர்களுக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்படும். திடீரென அவர்களிடம் அசௌகரியமான மாற்றங்கள் தென்படும். கட்டுக்கடங்காத தலைவலி ஏற்படும். சில நேரங்களில் நீடிக்கும் தலைவலி, அந்த நபரை மயக்கம் அடையவும் செய்யலாம்.

ப்ரூஸ்லீ மரணம் அடைந்த அந்த நாளில்... ரேமான்ட் சோ எனும் ஹாங்காங்கை சேர்ந்த தயாரிப்பாளரை சந்தித்தார். அவருடன் தனது அடுத்த படமான கேம் ஆப் டெத் என்ற படத்தைப் பற்றி விவாதம் நடத்திவிட்டு மாலை 4 மணியளவில் வீடு திரும்பினார் ப்ரூஸ்லீ.

வீடு திரும்பியதும் ப்ரூஸ்லீக்கு மீண்டும் தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது. வலி குறையவே இல்லை. அப்போது ப்ரூஸ்லீயுடன் தங்கியிருந்த நடிகை பெட்டி டிங் பீ அவருக்கு ஆஸ்பிரின் மற்றும் மெப்ரோபாமாட் கலப்பு கொண்ட ஒரு வலிநிவாரணி மருந்தினை கொடுத்தார்.

அன்றைய தினம் இரவு ஜேம்ஸ்பாண்ட் புகழ் ஆங்கிலேயே நடிகர் ஜார்ஜ் லஸென்ஸ்பிஉடன் இரவு உணவு அருந்த திட்டமிட்டிருந்தார் ப்ரூஸ்லீ. ப்ரூஸ்லீயும், இவரும் ஆங்கிலத்தில் ஒரு படம் எடுக்க விவாதம் நடத்தவும் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அன்று மாலை மருந்தை உட்கொண்டு படுத்த ப்ரூஸ்லீ எழுந்திருக்கவே இல்லை.

ப்ரூஸ்லீயை உடனே குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கே ப்ரூஸ்லீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரணம் அடைந்துவிட்டார் என கூறினார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையில் ப்ரூஸ்லீக்கு மூளை வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் உட்கொண்ட மருந்தின் அலர்ஜியின் காரணத்தால் மூளை 13% வீக்கம் அடைந்து அவரது மரணத்திற்கு காரணமாகியுள்ளது என கூறினார்கள்.

ப்ரூஸ்லீ இறந்து ஏறத்தாழ 45 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் சினிமா ரசிகர்ளுக்கு டிராகன் என்றால் ப்ரூஸ்லீ என்ற பெயரே நினைவிற்கு வரும். இவ்வுலகில் தலைசிறந்த திறமைசாலிகள் யாரும் நீண்ட வருடம் வாழ்ந்ததில்லை. அதற்கு ப்ரூஸ்லீயும் ஒரு எடுத்துக்காட்டு.

Source: Oneindia
http://www.manithan.com/cinema/04/151659?ref=recommended1

No comments:

Post a Comment