தமிழர்களின் குரலாக ஒலிக்கவேண்டிய உலகத்தமிழர் பேரவையானது, அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று, தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டத்தில், நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலிலேயே, இந்தக் குற்றச்சாட்டுக்கள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது.
உறுப்பினர்களால் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
உலகத் தமிழர் பேரவையானது வண. பிதா இம்மானுவேலின் தலைமையில், சுரேன் என்று அழைக்கப்படும் பிரிட்டனைச் சேர்ந்த இன்னொரு செயற்பாட்டாளர் இணைந்து பொது அமைப்பாக இல்லாமல், தமக்கான நிகழ்ச்சி நிரலை முன்னெ டுப்பவர்களாக அண்மைக்காலமாக மாறியுள்ளனர்.
உலகத் தமிழர் பேரவை தொடங்கப்பட்டபோது 13 தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளின் அமைப்புகள் அதன் கிளை அமைப்புகளாக இணைந்திருந்தன. தற்போது பத்து அமைப்புகள் வெளியேறியுள்ளன.
இங்கு (ஆஸ்திரேலிய) தமிழர் பேரவையானது தொடங்கப்பட்டபோது,
தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வை வலியுறுத்தி, அதன் இலக்காகக் கொண்டு பல்வேறு திட்டங்களை, வகுத்துச் செயற்படுவதாகவே அதன் யாப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது அந்தக் கோரிக்கைகளைக் கைவிட்டு அரசுடன் இணைந்து செயற்படுகின்றது. தமிழ் மக்களின் பிரதிநிதியாக செயற்படவேண்டிய வண. இம்மானுவேல் இராணுவத்தின் இரத்தக்கறை படிந்த வரலாற்றை மறைக்கும் வகையில் செயற்படுகின்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த மூன்று வருடங்களாக இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவது போன்ற உலகத்தமிழர் பேரவையின் செயற்பாடுகளால், தமிழர்களின் அணுகுமுறை தோல்வியில் முடிவடைந்த மாதிரியான நிலையே காணப்படுகின்றது. அதனை உடனடியாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப் பட்டது.
ஆஸ்திரேலிய தமிழர் பேரவையானது, உலகத்தமிழ் மக்கள் பேரவையின் அங்கமாக செயற்படாமல், ஆஸ்திரேலிய தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கவேண்டும் எனவும், தாயக மக்களின் போராட்டங்களுக்கான உந்துசக்தியாக அது செயற்படவேண்டும் என்றும், அதுபற்றிய முடிவை அடுத்த 3 மாதத்தில் எடுக்கவேண்டும் எனவும் கூட்டத்தில் பெரும்பாலானவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய ஆஸ்திரேலியத் தமிழர் பேரவையின் தலைவர் ஜெகநாதன், ஆஸ்திரேலியத் தமிழர் பேரவையின் அங்கத்தவர்களின் கருத்துக்களை விளங்கிக் கொள்வதாகவும் அதற்கான உறுதியான முடிவுகளை விரைந்து எடுப்பதாகவும் அதுபற்றிய விவரங்கள் அங்கத்தவர்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்றார்.
http://www.jvpnews.com/srilanka/04/150881
No comments:
Post a Comment