Monday, November 27, 2017

தமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட்


இலங்கை அணியின் முன்னாள் இடதுகை துடுப்பாட்ட வீரரும் தற்போதைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் இலங்கை இந்திய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில்  தமிழில் கள அறிக்கை (pitch report) வழங்கியதன் மூலம் உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் மனதை வென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் கடந்த 16ம் திகதி கொல்கத்தாவில் ஆரம்பமானது. இத்தொடருக்கு வர்ணனையாளராக இலங்கையின் சார்பில் ரசல் ஆர்னல்ட் நியமிக்கப்பட்டிருந்தார். நாக்பூரின் VCA மைதானத்தில் நடைபெறும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் போதே ரசல் தமிழில் வர்ணனை வழங்கி அசத்தியுள்ளார்.
ரசல் ஆர்னல்ட் உடன் இந்திய அணியின் முன்னாள் தமிழக சுழல் பந்து வீச்சாளரும் தற்போதைய கிரிகெட் வர்ணனையாளருமான முரளி கார்த்திக்கும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் வர்ணனையில் தனக்கென தனி இடத்தைக்கொண்டுள்ள ரசல் இலங்கையின் முன்னணி வர்ணனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டான நிலைமைகளில் இலங்கை கிரிக்கெட் அணியை வர்ணனையாளர் அறையினுள் விட்டுக்கொடுக்காமல் பேசி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் நன்மதிப்பை வென்றுள்ள நிலையில் ரசல் ஆர்னல்டின் இந்த தமிழ் வர்ணனை மூலம்  உலகம் பூராகவும் உள்ள தமிழ் பேசும் மக்களின் அபிமானத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ரசல் ஆர்னல்டின் இந்த வர்ணனை குறித்து ரசிகர்கள் பலரும் Twitter வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 ரசல் பிரேமகுமாரன் ஆர்னல்ட் இலங்கை அணி சார்பாக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1821 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 180 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3950 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஓய்வுபெற்ற ரசல் கிரிக்கெட் வர்ணனையாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment