Sunday, November 19, 2017

வவுனியாவில் மீண்டும் கண்மூடித்தனமான வாள்வெட்டு தாக்குதல் : முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட இளைஞர்!

வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வாள் வீச்சில் ஈடுபட்டதுடன், புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம்(18) இரவு 8.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
புதிய கற்பகபுரம் கிராமத்தினுள் வாள்களுடன் புகுந்த இளைஞர் குழு ஒன்று அங்கிருந்த இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

அது மட்டும் இன்றி வாள் வீச்சிலும் ஈடுபட்டதுடன், நிரோசன் (வயது -30) என்ற இளைஞனை (AAE-5668) என்ற இலக்கமுடைய முச்சக்கர வண்டியில் கடத்திச்சென்றுள்ளது.
இவர்களை பின் தொடர்ந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வைத்து மடக்கி பிடித்ததுடன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தன்னை வண்டியில் கடத்தி செல்லும்போது வாளினால் முச்சக்கர வண்டிக்குள் வைத்து தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது குறித்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
எனினும், இச்சம்பவத்திற்குரிய காரணம் இதுவரையில் அறியப்படாத போதும் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குழுவினர் ஏற்கனவே வாள்வீச்சில் ஈடுபட்டு வருகின்றவர்கள் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
வவுனியா புதிய கற்பக புரம் பகுதியில் ஏற்பட்ட வாள்வீச்சு சம்பவத்தையடுத்து அக்கிராமத்தின் ஸ்தாபகரும் சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகமுமான ப.உதயராசா சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டுள்ளார்.
பின்னர் உடனடியாக பொலிஸாருக்கும் உயரதிகாரிகளும் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை, பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று நிலமைகளை கேட்டறிந்ததுடன், காயபட்ட நபரை வவுனியா வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/165514

No comments:

Post a Comment