Saturday, September 30, 2017

"நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் “


தொலைக்காட்சி நம் நாட்டிற்குள் புகாத பொற்காலம் அது..! அகில இந்திய வானொலிஅத்தனை வீடுகளிலும் அரசாட்சி செய்து வந்த நேரம் .
அந்தக் காலத்தில்தான் , அந்த கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார்.
பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட … அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் .
கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – கண்ணதாசனை ..!
ஆம் … அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார்
இதோ .. அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது :
“ஒரு முறை சென்னை வானொலியில் ‘இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள்.
நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.”
அவ்வளவுதான் ..! அடுக்கடுக்காக போன் கால்கள் ..! யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!
“சபாஷ்.. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம். நீங்கள் எடுத்துச் சொன்ன பிறகுதான் , இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது தெரிகிறது.. அற்புதமாக பேசினீர்கள்..!”
இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க ,
உச்சி குளிர்ந்து போனது அந்தப் பெண்ணுக்கு ..!
மறுபடியும் ஒரு போன் கால் ! “இது யாருடைய பாராட்டோ ..?” என பரவசத்துடன் போனை எடுத்தார் அந்தப் பேராசிரியப் பெண். மறுமுனையில் ஒலித்த குரல் : “நான் கண்ணதாசன் பேசுகிறேன்..”
பதறிப் போனார் அந்தப் பெண் . அவருக்கு கையும் ஓடவில்லை .. காலும் ஓடவில்லை..!
உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொள்ள , போனைப் பிடித்திருந்த கை நடு நடுங்க “சொல்லுங்க ஸார் ..”
தொடர்ந்து கண்ணதாசன் :
“சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.
பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் , உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.
ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் , பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது.
அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.
உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில் , கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?
ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”
என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது.
இது தவறு என்று சொல்கிறீர்களா?” ஆல் இந்தியா ரேடியோவில் ஆரவாரமாக பேசிய அந்தப் பெண் , இப்போது அடுத்த முனையில் பேசிக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.
“மன்னித்துக் கொள்ளுங்கள் ஸார் ..” இந்த நிகழ்வை பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்ட அந்த பேராசிரிய பெண் சொன்ன முத்தாய்ப்பு வார்த்தை:
“கண்ணதாசன் சொன்னதைக் கேட்டது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது”. இந்தப் பேராசிரியைக்கு கண்ணதாசன் மீது மதிப்பு அதிகரிக்க காரணம் …
அவர் பேச்சில் இருந்த எளிமை …உண்மை..!
அடுத்த காரணம் .. திரை உலகின் உச்சத்தில் இருந்த காலத்திலும் , இந்தப் பெண்ணுக்கு அவரே போன் செய்து , தன் தரப்பு நிலையை விளக்கிச் சொன்ன பண்பு.. பணிவு..!
ஆம் ..!
“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும் “














Vaith Srirasavarothayan 

No comments:

Post a Comment