Thursday, August 4, 2016

சுவிஸில் குடியுரிமைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமைக்காக காத்திருக்கும் வெளிநாட்டினர்களுக்கு உதவ அந்நாட்டு எஸ்.பி கட்சி முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் வெளிநாட்டினர்கள் குடியுரிமை பெறுவது தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
எதிர்வரும் 2018 ஜனவரி 1-ம் திகதி முதல் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
தற்போது சுவிஸில் 12 ஆண்டுகளாக குடியிருக்கும் வெளிநாட்டினர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், 2018ல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் மூலம் சுவிஸில் 10 ஆண்டுகளாக குடியிருப்பவர்களும் குடியுரிமை பெற முடியும்.
எனினும், இவர்கள் C permit எனப்படும் நிரந்தர குடியிருப்பு அனுமதியை பெற்றிருப்பது அவசியமாகும்.
தற்போது, B permit எனப்படும் தற்காலிக குடியிருப்பு பெற்றவர்களும் குடியுரிமை கோரி விண்ணிப்பிக்கலாம்.
ஆனால், 2018ம் ஆண்டு புதிய சட்டத்தின் மூலம் B permit வைத்துள்ள சுமார் 6,50,000 வெளிநாட்டினர்களுக்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் உரிமை பறிக்கப்படும்.
இதுபோன்ற ஒரு சூழலில், சுவிஸில் உள்ள Socialist Party(SP) கட்சி ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1-ம் திகதி சுவிஸில் தேசிய தினம் கொண்டாடப்பட்டபோது எஸ்.பி கட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், சுவிஸ் குடியுரிமைக்கு காத்திருக்கும் வெளிநாட்டினர்களுக்கு உதவ தானாக முன்வந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலேயே சுவிஸில் தான் குடியுரிமை பெறுவதற்கு என்ணற்ற தடைகள் உள்ளன. இதைவிட, 2018ம் ஆண்டின் புதிய சட்டம் கூடுதலான சிரமங்களை உருவாக்கும்.
எனவே, B permit வைத்துள்ள ஒவ்வொரு வெளிநாட்டினருக்கும் கடிதம் அனுப்ப எஸ்.பி கட்சி முடிவு செய்துள்ளது.
அதாவது, ஒவ்வொரு மாகாண அரசுடன் இணைந்து அங்குள்ள B permit வைத்துள்ள வெளிநாட்டினர்கள் எப்படி குடியுரிமை பெறுவது? என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும்? என்னென்ன உதவிகள் தேவை? என்பதை அறிந்து எஸ்.பி கட்சி உதவும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டை பொருத்தவரை அனைத்து தகுதிகளும் இருந்தாலும், அந்நாட்டு குடிமக்களிடம் ஒருங்கிணைந்து பழகாத வெளிநாட்டினர் குடியுரிமை பெறுவது மிகவும் கடினமாகும்.
உதராணமாக, சுவிஸில் கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்த அமெரிக்க குடிமகன் ஒருவர் சுவிஸ் குடிமக்களிடம் சரியாக கலந்து பழகாத காரணத்திற்காக அவருக்கு 2014ம் ஆண்டு குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment