Wednesday, August 5, 2015

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 961 முறைப்பாடுகள்!- கபே

ஜெனிவாவை எதிர்கொள்ள விசேட பொறிமுறை வரும்! தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்கிறார் பிரதமர்
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 12:23.20 AM GMT ]
இலங்கை விவகாரம் தொடர்பான ஜெனிவா அறிக்கைக்கு எமது அரசாங்கம் வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்கும்.தேசிய நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புடன் விசேட பொறிமுறையொன்றை ஆரம்பிப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான உரிய தீர்வினை முன்வைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை முன்நகர்த்தி செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்னை தோற்கடிப்பதற்கு 2005 ல் பிரபாகரனுடன் மஹிந்த ராஜபக்ச உடன்படிக்கை செய்து கொண்டமையின் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாவிடின் ,என்னுடைய நல்லிணக்க செயற்பாடுகள் மாத்திரம் எவ்வாறு
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும்? என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டை கட்டியெழுப்புவதற்கு சிறுபான்மை மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்ப்பது மிகவும் அவசியமாகும். நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் கொண்டு நாட்டை வளர்ச்சிக்குட்படுத்துவதே எமது குறிக்கோளாகும்.
நாட்டின் முப்பது வருடகால யுத்தம் நிறைவடைந்துள்ளது. சிறுப்பான்மை மக்களின் நலன்கள் தொடர்பில் நாம் ஆராயவேண்டியுள்ளது. தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்காவின் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவை நாம் நியமிப்போம். மேலும் தீர்வு விடயத்தில் சர்வதேச ஒத்துழைப்புடன் நாம் செயற்படவுள்ளோம். இதற்கான ஆலோசனைகளை நாம் சர்வதேச நாடுகளிலிருந்து கோரவுள்ளோம்.
எனினும் நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் சர்வதேசத்தை இந்த பிரச்சினையில் தலையிடவைத்தது மஹிந்த ராஜபக்சவாகும். சர்வதேச விசாரணைக்கு முழுமையான பொறுப்பை மஹிந்த ராஜபக்சவே ஏற்கவேண்டும்.
நாட்டில் உள்ளக பொறிமுறையொன்றை ஆரம்பிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் வாக்குறுதி அளித்து அதனை மீறி செயற்பட்டமையினாலேயே சர்வதேச அழுத்தங்கள் இலங்கைக்கு எதிராக திரும்புவதற்கு பிரதான காரணமாகும்.
மேலும் செப்டம்பர் மாதம் அளவில் இலங்கை தொடர்பில் ஜெனிவா குழுவின் அறிக்கை வெ ளியிடப்படவுள்ளது. இது எமக்கு புதியதொன்றல்ல பல தடவை குறித்த அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த அறிக்கை தொடர்பில் முன்னைய அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எவ்வாறு செயற்பட்டார் என்பது எமக்கு தெரியாது. இருந்த போதிலும் இந்த அறிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் வெற்றிகரமாக முகங்கொடுக்கும்.
ஆகவே நாட்டின் நல்லிணக்கத்தை முன்னகர்த்துவதே எமது அரசியலின் பிரதான ் திட்டமாக உள்ளது. மேலும் சிறுப்பான்மை மக்களின் தீர்வு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஒத்துழைப்பை கொண்டு தீர்வு காண திட்டமிட்டுள்ளோம்.
பிரச்சினைகளுடன் எம்மால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இன ரீதியான பிரச்சினைக்கு நாம் முடிவுக் கட்டி நல்லிணக்கம் மற்றும் இன மதங்களுக்கிடையிலான ஒற்றுமை விடயத்தில் நாட்டை முன்நகர்த்த வேண்டியுள்ளது.
மேலும் தற்போது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி வருகின்றனர். நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட இடமளிக்க போவதில்லை.
2005 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது என்னை தோற்கடிப்பதற்காக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டு என்னை தோற்கடித்தமை தேசியப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாவிடின் , நாட்டின் நலனை கருத்திற் கொண்டு நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதனால் மாத்திரம் எவ்வாறு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
அது மாத்திரமின்றி கே.பி என்ற குமரன் பத்மநாதனை நாட்டிற்கு அழைத்து வந்துள்ளமை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையதா என்று வினவுகின்றோம்.
ஆகவே நாட்டின் அபிவிருத்தியை மையமாக கொண்டு பொருளாதாரத்தை நான் கட்டியெழுப்புவேன். அதிக முதலீடுகளை நாட்டிற்கு வரவழைத்து காட்டுவேன். பொருளாதார ரீதியாக அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்து சர்வதேச சந்தைக்கு இலங்கையை கொண்டு செல்வேன்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு நியாயம் வேண்டி கடற்படை வீரர் பாதயாத்திரை
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 03:05.21 AM GMT ]
மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ உத்தியோகத்தருக்கு நியாயம் வேண்டி கடற்படை வீரர் ஒருவர் பாதயாத்திரையொன்றை ஆரம்பித்துள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்த பொதுமக்கள் எட்டுப்பேரை சுட்டுக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தி குறித்த இராணுவ உத்தியோகத்தருக்கு அண்மையில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த இராணுவ உத்தியோகத்தருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி, ஊனமுற்ற கடற்படை வீரர் ஒருவர் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த என்.டி. வசந்த குமார என்ற நபரே இவ்வாறு பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளார்.
கடந்த மூன்றாம் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதியின் முன்னிலையிலிருந்து இந்த பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
விதிக்கப்பட்ட மரண தண்டனை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி இந்த குறித்த கடற்படைவீரர் பாத யாத்திரை மேற்கொள்கின்றார்.
இந்த கடற்படை வீரர் அனுராதபுரத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் பாத யாத்திரையாக சென்று மகஜர் ஒன்றை ஒப்படைக்கவுள்ளார்.
இந்த மகஜரில் தனது எட்டு சுய கோரிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளார்.
பிள்ளையை பாடசாலையில் இணைத்தல், அதி சக்தி வாய்ந்த மின்சார கம்பிகள் தமது வீட்டை ஊடறுத்துச் செல்வதாகவும் அதனை அகற்றுதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளையும் குறித்த படைவீரர் முன்வைத்துள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில் விறகு பொறுக்கச் சென்ற தமிழர்கள் எட்டு பேரை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கி கொலை செய்த ஆழ ஊடுருவித் தாக்கும் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர் ஒருவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற முதன்மைக் கோரிக்கையின் அடிப்படையில் குறித்த கடற்படைவீரர் பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 961 முறைப்பாடுகள்!- கபே
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 03:10.23 AM GMT ]
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 961 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் விதிகளை மீறுதல் தொடர்பில் 887 முறைப்பாடுகளும்,  தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 74 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
கொழும்பு, பதுளை, அனுராதபுரம், கம்பஹா மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான தேர்தல் விதி மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பொதுச் சொத்து பயன்பாடு,  அரச ஊழியர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தல்,  நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள்,  சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், சட்டவிரோத தேர்தல் பிரச்சாரங்கள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,  ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரக் காரியாலங்களை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment