இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் உள்ள ஹேம்ப்ஷைர் நகரில் வாழ்ந்துவரும் 100 வயது பெண் தனக்கு திடீர் கர்ப்பம் ஏற்பட்டதை அறிந்து திகைப்பில் ஆழ்ந்துப் போனார். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவரது மூத்த மகனின் வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று குழந்தைகளின் மூலம் பிறந்த 20 பேரப்பிள்ளைகளுடன் வெஸ்ட் சூஸெக்ஸ் பகுதியில் வாழ்ந்துவரும் டோரிஸ்(100) என்ற பெண்ணுக்கு, இங்குள்ள ஃபரேஹாம் கம்யூனிட்டி ஆஸ்பத்திரி கடந்த மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியது.
‘கர்ப்பிணியான நீங்கள் வரும் செப்டம்பர் மாதம் நான்காம் தேதி காலை சரியாக 9.45 மணிக்கு எங்கள் மகப்பேறியல் துறை சிறப்பு மருத்துவரை பரிசோதனைக்காக சந்திக்க வேண்டும்’ என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கர்ப்பம் தொடர்பாக எடுத்துக்கொண்ட சிகிச்சை தொடர்பான விபரங்களையும், காலையில் எழுந்தவுடன் வெளியேறிய முதல் சிறுநீரில் இருந்து மாதிரியையும் வரும்போது கொண்டு வர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதைப்பார்த்து திகைப்படைந்த டோரிஸ், தனது குடும்பத்தாருக்கு இந்த தகவலை சொன்னபோது அனைவரும் விழுந்து, விழுந்து சிரிக்கத் தொடங்கினர். பேரன், பேத்திகள் அவருக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்தனர்.
நொந்துப்போன டோரிஸ் உடனடியாக அந்த ஆஸ்பத்திரிக்கு போன் செய்து இந்த அக்கப்போரைப் பற்றி விசாரித்தபோது, அதே ஆஸ்பத்திரியில் மகப்பேறு தொடர்பான சிகிச்சை பெற்று வரும் இன்னொரு டோரிஸுக்கு அனுப்பப்பட வேண்டிய அந்த கடிதம், தவறுதலாக, அங்குள்ள மற்றொரு துறையில் சிகிச்சை பெற்றுவரும் நூறு வயது டோரிஸுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தனர்.
அந்த கடிதத்தால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கடைசி குழந்தையை பிரசவித்த டோரிஸ், ‘எனக்கு நூறு வயதாகின்றது. இந்த வயதில் எப்படி எனக்கு கர்ப்பம் தறிக்கும் என்பதை கூட அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் சிந்திக்க தவறிவிட்டது, வேடிக்கையாக உள்ளது’ என்கிறார்.
அவர் கூறுவது உண்மைதான், என்பதற்கு சாட்சியாக ஆஸ்பத்திரி நிர்வாகம் டோரிஸுக்கு அனுப்பிய கடிதத்தில் அவரது பிறந்ததேதி 21-11-1915 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, கவனிக்கத்தக்கது.
Uk Mother 01Uk Mother 02Uk Mother