காதலனுடன் வெறுப்பாக உள்ள தந்தையின் மனதை மாற்றித் தருவதாகக் கூறி, யுவதி ஒருவரை ஏமாற்றி ரூபாய் பதினொரு இலட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் இந்திய மந்திரவாதி ஒருவரை கொள்ளுப்பிட்டியில் கைது செய்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். தமது தந்தையின் வியாபார நடவடிக்கை மேம்படவும் வீட்டுக்கு ஆசி வேண்டியும் பூஜை நடத்துவதற்காக வர்த்தகர் அழைத்து வந்திருந்த மந்திரவாதியைத் தந்தைக்குத் தெரியாமல் அணுகிய யுவதி, தன் காதலனைத் தந்தைக்குப் பிடிக்கவில்லை எனவும் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தரும்படியும் கேட்டுள்ளார்.
யுவதியின் நிலையைப் புரிந்து கொண்ட இந்திய மந்திரவாதி இது சிரமமான விடயமெனவும் தங்கம், வெள்ளியிலான விக்கிரகமொன்றை இந்தியாவில் வைத்துப் பூஜை செய்ய வேண்டுமெனவும் இதற்குப் பெருந்தொகைப் பணம் செலவாகுமெனவும் கூறியுள்ளார். மந்திரவாதியின் பேச்சை நம்பிய யுவதி, அவர் கைபேசி மூலம் அனுப்பிய வங்கிக் கணக்கிற்கு அடிக்கடி ஆறு இலட்சம் ரூபாய் வரை பணத்தை வைப்பிலிட்டதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எனினும், காதலன் மீது தந்தை கொண்டிருக்கும் விரோதப்போக்கு மாதங்கள் சில கடந்தும் மாற்றமடையவில்லை. இதனையடுத்துப் பூசாரியைத் தொடர்புகொண்ட யுவதி, பூஜை நடத்த வேண்டிய அவசியம் இல்லையெனவும் செலுத்திய பணத்தை மீளத் தருமாறும் கேட்டிருக்கிறார்.
அவ்வாறு பூஜையை இடைநடுவில் நிறுத்தினால், தெய்வ குற்றமாகிவிடுமெனவும் அதனால் தந்தை மரணிக்க நேறிடுமெனவும் மந்திரவாதி கூறியதால் அச்சமடைந்த யுவதி மீண்டும் அந்த மந்திரவாதி பூசாரி கேட்ட பணத்தைக் கொடுத்திருக்கின்றார். காலப்போக்கில் தாயார் உயிரிழக்கவும், தந்தையும் இறந்துவிடுவார் எனப் பயந்த யுவதி தாயாரின் நகைகளையும் அடகு வைத்து பதினொரு இலட்சம் ரூபாய் வரை பூசாரிக்குப் பணம் அனுப்பியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளாரென்று பொலிஸார் தெரிவித்தனர். பல மாதங்கள் கடந்தும் எதுவும் நடைபெறாததால், தந்தையிடம் விடயத்தைக் கூறிய யுவதி, தந்தையுடன் வந்து முறைப்பாடு செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment