Monday, March 30, 2015

ஐந்து வருடங்களாக யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார்: வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் 5 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கிறிஸ்தவ மதபோதகருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த நிலையில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்த சிறுமியை சபையின் மதபோதகர் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து துஷ்பிரயோகம் செய்ததாக 20 வயது யுவதி ஒருவர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளார்.
யுவதியை சிறு வயதில் பராமரித்து வந்த பெண் ஒருவருமே இம் முறைப்பாட்டினை செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி தனது பெற்றோரை இழந்த நிலையில் வேறு ஒருவரின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்து வந்த நிலையில், அவர் தொடர்ந்தும் கல்வி கற்பதற்காக கிறிஸ்தவ சபை ஒன்றின் பராமரிப்பு நிலையத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு அவரது 11 ஆவது வயதில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றின் மதபோதகர் பராமரிப்பு நிலையத்திலிருந்து குறித்த யுவதியை பொறுப்பெடுத்து வளர்த்து வந்த நிலையில், மதபோதகரின் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த யுவதியை மிரட்டி பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவ்வப்போது தொடர்ந்து இவ்வாறு செய்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment