Sunday, February 15, 2015

விடுதலைப்புலிகளின் வரலாறு தெரிந்ததா..?

விடுதலைப்புலிகளின் வரலாறு தெரிந்ததா..?கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ‘ அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்’ என்று..,

வீடிழந்த, ஊரிழந்த, மண் இழந்த சோகத்தை செரிக்கமுடியாமல் தமிழ்நாட்டு அகதி முகாமில் தினமும் கடலின் முடிவையே பார்த்து கொண்டிருக்கும் முதியவர் கண்களில் நம்பிக்கை பொங்கி வழிய சொல்வார். ‘ தலைவர் நிச்சயம் ஒருநாள் வருவார்…அவர் வரவேணும்…’என்று
நேர்த்திக்காக லூட்ஸ் மாதா போய்வந்த குடும்பம் ஒன்று மிக நம்பிக்கையுடனேயே சொன்னது ‘தலைவருக்கு ஒன்றும் நேரக்கூடாது என்று மாதாவுக்கு மெழுகுவர்த்தி ஏற்றினோம்.. அவர்தான் இந்த இனத்துக்கு தேவை’..
2009 மே மாதத்துக்கு பிறகு சொல்லமுடியாத வறுமைக்குள்ளும், சமூக நிராகரிப்புக்குள்ளும், அன்றாட தேவைகளையே தன் பிள்ளைகளுக்கு நிறைவேற்றிவைக்க முடியாத போராளி தாய் ஒருத்தி.

‘ அண்ணை இப்போ வெளியாலை இருந்தால் எங்களை இப்பிடி விடவேமாட்டார்..அவர் எங்கை இருந்தாலும் எங்களை பற்றியே நினைத்து கொண்டிருப்பார் ‘ என்று சொல்வதும்,
படிப்பின் உச்சங்களை வெகு சாதாரணமாக தாண்டி கலாநிதி பட்டங்களும் மிகச்சிறந்த ஆய்வுகளும் தரும் பல்கலைகழகசமூக அறிவுத்தூண்களில் ஒருத்தர் ‘ இப்போதைய தமிழ் சமூகத்தின் அத்தனை தூசிகளையும் துடைத்தெடுத்து, இதனை சரியான மனிதர்களாக மாற்றுவதற்கு அவர்தான் வரவேணும்’ என்பதும்
எல்லாவற்றிலும் மேலாக நவம்பர் 26ம் திகதி நெருங்கும் போதே ஏதோ தங்கள் வீட்டின் முக்கிய இரத்த சொந்தம் ஒன்றின் பிறந்தநாள் வருவது போல கோடானுகோடி தமிழர்கள் எண்ணுவதும் கொண்டாடுவதும் அந்த மனிதனின் வரலாற்று தேவையை இன்னும் மிகத் தெளிவாகவே உணர்த்தி நிற்கின்றன.
இந்த இனத்துக்கு இருந்துகொண்டிருக்கும் மிகநீண்ட வரலாற்றை கொண்ட மொழியின் மக்கள் என்ற பெருமையோ,
ஆழமான பண்பாட்டு வேர்களையும் அதனூடு எழுந்த செவ்விலக்கியங்களையும் கொண்ட மக்கள் என்ற பெரும் மகிழ்வோ
,உலகில் மிகநீண்ட கால(சோழ) பேரரசு ஒன்றின் ஆட்சிமொழியை பேசும் மக்கள் என்ற பேருவகையோ, எத்தனை இருந்தாலும் அவை எல்லாவற்றையும்விட பிரபாகரன் என்ற மனிதன் பேசும் மொழியை பேசுகின்றோம்,
அவரது இனத்தின் மக்கள் என்பதே உயரிய பெரும் பெருமையாக நினைக்கும் அளவுக்கு அந்த மனிதன் இந்த வரலாற்றின் மிக முக்கிய இயக்கு சக்தியாக வழிகாட்டியாக நிலைத்திருக்கிறார்.
இன்றும் கூட மேலாதிக்க-வல்லாதிக்க சக்திகள் எல்லாம் ஒரு சமன்பாட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். .அதுதான் போருக்கு பின்பான தமிழினம் எழுவது இப்போதைக்கு முடியாது மட்டுமல்ல.முடியவே முடியாது என்பதுதான் அது.
படைத்துறை வலு,போரிடும் வலு, ஆளணிவலு என்று எதுவுமே இல்லாத ஒரு பொழுதில் வல்லாதிக்கத்தினதும் சிங்கள பேரினவாதத்தினதும் கணிப்பு ஒரளவு சரி என்றே தோன்றும்.
ஆனால் இதனை எல்லாம் உடைத்தெறியக் கூடியது ஒரே ஒரு ஒற்றைக்குரல் என்பதை அவர்கள் சுலபமாக மறந்துவிடுகிறார்கள்.
பிரபாகரன் எனும் அந்த மனிதனது ஒற்றைகுரல் ஒன்று போதும் மீண்டும் இந்த இனத்தின் அத்தனை வலுவும் எழுவதற்கு. இந்த நம்பிக்கையே இன்று உலகம் முழுதும் அத்தனை தமிழ் மக்களதும் நெஞ்சுக்குள் படர்ந்திருக்கிறது.
இந்த நம்பிக்கையை அந்த மனிதன் எவ்வாறு பெற்றுக் கொண்டார்.
அவரது வரலாற்றை ஆழ்ந்து பார்த்தால்,அவரது ஆரம்பவரலாற்றை நேரடியாக பார்த்திருக்கும் ஒரு பேறு கிடைத்ததால் ஒன்றை உறுதியாக சொல்லலாம் ‘ இந்த இனத்தினது நம்பிக்கையை பெற்று கொள்ள வேண்டும் என்பதற்காகவோ,இதன் அங்கீகாரத்துக்காகவோ வலிந்து எதனையும் செய்தவர் அல்ல’ ஆனால் மிகமிக உண்மையாக போராடினார்.
தான் நம்பிய இலட்சியத்தை வென்றடைய முழுமையான அர்ப்பணிப்பு அவரிடம் இருந்தது.அதனைவிட ஓய்வறியாத பயணம் இருந்தது.எதற்கும் சோர்ந்து போகாத வலு இருந்தது.இவை எல்லாவற்றையும் விட இந்த மக்களை தன் உயிரினும் மேலாக நேசித்தார்.அதுவே அவருக்கான அங்கீகாரத்தை மிக இயல்பாக பெற்று தந்தது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
தெளிவான அரசியல்ஒன்றை வரித்துக்கொண்ட அவர் அதனை அடைய ஓய்வு ஒளிச்சல் அற்ற செயற்பாடே முக்கியம் என்பதை முன்வைத்து பயணப்பட்டவர்.அவருடைய பயணம் இப்போது அறுபதாவது அகவையில் நிற்கிறது.
எங்கள் எல்லோரினதும் முன்நிலை களப்பயணி அவர்.1973ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி அவர் தனது வீட்டை முழுதாக துறந்து தேசத்துக்கான விடுதலைப்பாதையில் நடக்க ஆரம்பிக்கின்றார். இன்று நாற்பது வருடங்களுக்கும் மேலாகின்றது அவர் போராட புறப்பட்டு. தனது வழிகாட்டி வரலாறு என்றே அவர் சொன்னார்.
எமக்கும் வரலாறுதான் வழிகாட்டி.அவரது வரலாறுதான் வழிகாட்டி.அந்த வரலாறுமுழுதும் எண்ணற்ற சம்பவங்கள் நாம் கற்றுக்கொள்ள, எம்மை கூர்தீட்டி கொள்ள, எம்மை செதுக்கி கொள்ள. அவரது ஆற்றல்கள் அனைத்துமே ஒருவிதமான நுண்ணிய தன்மை கொண்டவை. யாராலும் அளவிடவே முடியாதவையாக அவை இருக்கும்.
அவரது நுண்ணிய ஆற்றல்கள் நிறைந்த அவரது கணிப்புகள். பெரும்பாலும் அது தவறுவதே இல்லை.
ஒருமுறை 80ம் ஆண்டில் வன்னியின் முல்லைத்தீவுக்கு அண்மித்த அடர்காடொன்றில் பண்ணை முறையிலான முகாம் ஒன்றில் இருந்த போது அந்த முகாமில் இருந்து ஐந்து மைல்களுக்கு அப்பால் இருக்கும் கடை ஒன்றுக்கு சாமான்கள் வாங்க சென்ற போராளி ஒருவன் அந்த கடைகாரரிடம் குண்டூசி வாங்க கேட்டபோது அந்த கடைக்காரர் ‘ஏன் பொம் செய்யவா’ என்று கேட்டதாக அந்த போராளி திரும்பி வந்து சாப்பிடும்போது சர்வசாதாரணமாக சொன்னான்.
அந்தநேரம் அந்த முகாமில் செல்லக்கிளிஅண்ணா, கலா, வெங்கிட்டு, பொன்னம்மான் உட்பட பத்துபேர் இருந்தார்கள்.எல்லோரும் இந்த செய்தியை காதில் வாங்கி ஏதும் அர்த்தம் செய்யவில்லை.
ஆனால் எல்லோரும் சாப்பிட்ட உடனே தலைவர் எல்லோருக்கும் கைகளில் 100ரூபா தந்து எல்லோரும் உடனே இந்த முகாமைவிட்டு வெளிக்கிடுங்கோ.அடுத்த தொடர்பு வரும்வரைக்கும் உங்கள் பகுதிகளில் இருங்கோ என்றார்.
அந்த நேரம் முகாமில் இருந்த அனைவருக்கும் அதன் அர்த்தம் புரியவில்லை.எல்லோரும் ‘ யாரோ கடைக்காரன் ஒரு கதைக்காக கேட்டதை ஏன் தலைவர் ஆபத்து என்று நினைக்க வேண்டும் என்று கதைத்தார்கள்.
ஆனால் தலைவர் உறுதியாக சொல்லிவிட்டார் ‘ எல்லோரும் இன்று மாலை இருட்டு வருவதற்குள் வெளிக்கிட்டு விடவேணும்’ என்று.
அந்த நேரம்தான் அந்த முகாமில் அறுவடை செய்யப்பட்டிருந்த உழுந்து மூட்டைமூட்டையாக இருந்தது.
அத்தனையையும் விட்டுவிட்டு எப்படி செல்வது என்று மற்றவர்கள் கேட்டபோது தலைவர் சொன்னார் ‘பொருட்கள் பிறகும் வாங்கலாம்,ஆனால் உங்களில் யாரையும் இழக்க நான் தயாரில்லை’ என்று.
எல்லோரும் புறப்பட்டு சென்று ஒரு கிழமைக்குள் அரசாங்க பத்திரிகை தினகரனில் அந்த முகாம் சிங்கள பொலீஸ்படையால் பிடிக்கப்பட்டு அதில் இருந்த உழுந்துமூட்டைகள் எடுக்கப்படடதான செய்தி வெளிவந்திருந்தது.
இப்போது இதனை நினைத்து பார்த்தாலும் ஆச்சர்யமே மேலெழும்புகிறது. எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு தகவல் அவருக்கு மட்டுமே விடுதலைக்கான ஏதோ ஒன்றாக இருக்கிறது.
இந்த நுண்ணுனர்வு என்பது அவரது ஆழமான இலட்சிய தாகத்தில் இருந்தே உதயமாவதாக நான் நினைக்கிறேன்.முழுமையான ஈடுபாடு ஒருவிடயத்தில் இருந்தால் இயல்பாகவே அந்த விடயம் சம்பந்தமான உள்ளுணர்வுகள் வந்து விடும் என்பது விஞ்ஞான முடிபு.
இன்னொருமுறை பொலிகண்டி புதியகுடியேற்றத்தின் வீடுகளில் ஒன்றில் 83பெப்ரவரியில் தங்கி இருந்தபோது எல்லோரும் தூங்கி கொண்டிருந்த நேரம்.தலைவரும் தூங்கித்தான் இருந்தார்.
ஆனால் திடீரென எல்லோரையும் எழுப்பி ஒரு வெகுதூரத்தில் ஒரு வாகன சத்தம் வித்தியாசமாக இருப்பதை சொன்னார்.அந்த வீதி வாகனங்கள் அடிக்கடி செல்லும் வீதி என்பதால் மற்றவர்கள் அது சாதாரண வாகனம் என்றே சொல்லி மீண்டும் தூங்க எத்தனித்தனர்.
ஆனால் தலைவரோ ‘ இல்லை அந்த வாகனம் இந்த குடியேற்றத்துக்கு வரும் வழியில் நிற்கிறது’ என்று உறுதியாக சொல்லி இரண்டு போராளிகளை உடனே போய் என்ன என்று பார்த்து வரும்படி சொன்னார்.
போராளிகள் அங்கு சென்றபோது ‘ஒரு ஹையஸ் ரக வான் ஒன்று தலைவர் சொன்ன இடத்தில் நின்றிருந்தது. அது மண்ணுக்குள் புதைந்து நின்றதால் வாகனஓட்டி இன்ஜினை ரேஸ் பண்ணி கொண்டிருந்தார்.
போராளிகளுக்கு தெரிந்த வாகன ஓட்டி என்பதால் அது ஆபத்தான வாகனம் இல்லை என்று திரும்பி வந்தனர்.
மறுநாள் தலைவரிடம் அது எப்படி அத்தனை உறுதியாக அந்த இடத்தில்தான் வாகனம் நிற்கிறது என்று எப்படி இங்கிருந்தே சொன்னீங்கள் என்று கேட்டபோது ‘நேற்று இந்த இடத்துக்கு வரும்போது கவனித்தேன்.
அந்த இடத்தில் பாதையை மூடி மணல் கிடந்தது. அதில் ஏதோ ஒரு வாகனம் புதைந்து நிற்கிறது என்பதை கணித்தேன்’ என்றார்.
எல்லோருக்கும் அது வீதி.தலைவர் அதனையும் எவ்வளவு நுணுக்கமாக கவனித்து இருக்கிறார் என்று அதிசயமாக இருந்தது.
அமைப்பு, அதன் கட்டுபாடுகள், நடைமுறை என்பனவற்றில் கண்டிப்பானவராக இருக்கும் அதே மனிதனது இன்னொரு பக்கம் ஈரம் நிறைந்தது. கிட்டு ஒருமுறை பேட்டியில் சொன்னதுபோல ‘ இளகிய மனம் படைத்தவர்களே மற்றவர்களுக்கு நடக்கும் கொடுமைகள், அநீதிகளை கண்டு பொறுக்க முடியாமல் போராட வருகிறார்கள்.
போராளிகள் இளகிய மனம் கொண்டவர்கள்’ என்று சொன்னது போல தலைவரின் இன்னொரு பக்கம் முழுக்க முழுக்க பாசமும், அன்பும், அரவணைப்பும், நேசிப்பும் நிறைந்தவை.
ஆரம்பநாட்களில் காடுகளில் யாருக்கும் மலேரியா,அல்லது வேறு காய்ச்சல் வந்துவிட்டால் தலைவரே அருகில் இருந்து கவனிக்கும் காட்சிகள் இன்னும் மனதுள் நிற்கிறது.
‘மகனுக்கு என்ன செய்யுது’ மகன் இதை குடி’ ‘இந்த போர்வையை போர்த்து ‘ என்று இருக்கின்ற அற்ப வசதிகளுள் நல்லதை தரும் அந்த மனிதன் எல்லோரையும்விட மிகச்சிறந்த தந்தை போன்றவர். வீடுகளை துறந்து தன்னிடம் வரும் இவர்களுக்கு தானே ஒரு தாயாக தந்தையாக நிற்கவேணும் என்பதே அவரது நடைமுறை.
வெறுமனே ஆயுதங்களை இயக்குவதற்கு மட்டும் சொல்லித் தந்தவர் அல்ல அவர்.மிகச்சிறந்த இலக்கியங்களை படிக்க கொண்டுவந்து தந்தவர்.லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போன்ற உலக இலக்கியங்கள் முதற்கொண்டு மைக்கல்கோலின்ஸ் போன்ற விடுதலை வரலாறுகள் வரைக்கும் படிக்க சொல்லி பிறகு அதில் கேள்வியும் கேட்பார்.
தான் தவறவிட்ட ஆங்கிலமொழிக்கல்வியை கற்கவேணும் என்பதற்காக உடுப்பிட்டி அரியம் மாஸ்ரரிடம் கிட்டுவையும் எம்மையும் ரியூசனுக்கு அனுப்பியவர் அவர்.
இவை எல்லாவற்றினும் இன்னுமொரு அவரது ஆளுமை மீண்டும் மீண்டும் சொல்லத்தக்கது.எல்லாவற்றிலும் முக்கியமானது அவர் முடிவெடுப்பது என்பது ஒரு தனிமனித முடிவாக ஒருபோதும் இருந்தது இல்லை..எல்லோருடனும் கூடி கதைத்தே முடிவுகளை எடுக்கும் பண்பு நிறைந்தவர்.
.உதாரணத்துக்கு ஒரு சம்பவம்,83ம் ஆண்டு மேமாதம் யாழ். குடாவின் மூன்று நகரசபைகளுக்கும், யாழ். மாநகரசபைக்கும் தேர்தல் நடாத்தப் போவதாக சிங்கள தேசம் அறிவித்ததும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்துகள் அப்போதிருந்த போராளிகளிடம் கதைத்தே எடுக்கப்பட்டது என்பது பலருக்கும் வெளித்தெரியாத உண்மை.
அந்த தேர்தலை நிராகரிக்கும்படி,வாக்களிப்பை புறக்கணிக்கும்படி மக்களை கோருவது என்று மக்களிடம் கோரவேண்டும் என்ற தலைவரின் கருத்து பலமணி நேரம் பல உறுப்பினர்களால் விவாதத்துக்கும் உட்படுத்தப்பட்டது.
நாமோ 28பேர். முப்படைகளினதும் பொலீஸ்படையினதும் உதவியுடன் தேர்தலை நடாத்த சிங்களம் தேசம் முற்பட்டால் எவ்வாறு நாம் வெல்லமுடியும் என்ற அவநம்பிக்கை குரல்கள் எழுந்தன.
மக்கள் எமது கோரிக்கையை நிராகரித்து தேர்தலில் வாக்களித்தால் சிங்களதேசம் அதனை வைத்து போராளிகளை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பிரச்சாரம் செய்யும்.அது அமைப்பை அழிவுக்கு கொண்டு சென்று விடும் என்று சில உறுப்பினர்கள் தயக்கத்துடன் கதைத்தனர்.
நாம் பலமான பின்னர் இத்தகைய முயற்சிகளை செய்யலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
தலைவர் மிக ஆறுதலாக மிகமிக தெளிவாக விளக்கம் கொடுத்தார்.மறுநாள்கூட நீண்டது அந்த விவாதம். அப்போது தலைவர் சொன்ன ஒருவிடயம் ‘ அவன் எல்லா படையையும் வைத்திருக்கிறான் என்று பயந்து கொண்டிருந்தால் எங்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும்.
நாம் எமது மக்களை நம்பி இறங்குவோம். இருக்கின்ற எல்லா போராளிகளும் இருபத்துநான்கு மணிநேரமும் இதனை மட்டுமே இலக்காக வைத்து வேலை செய்தால் இது முடியும் ‘ என்றார்.
இறுதியில் எல்லோரது சம்மதத்துடன் தலைவரது கருத்தே ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் நிராகரிப்புக்கு மக்களை கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.சிங்களஅரச இயந்திரத்துக்கான அனைத்து தேர்தல்களையும் நிராகரிப்போம் என்ற தலைப்புடன் மறுநாளே துண்டுப்பிரசுரம் எம்மால் வெளியிடப்பட்டது.
தொடர்ச்சியான வேலைகளை தலைவரே முன்னின்று செய்தார். செய்வித்தார்.
83மே 18ம்திகதி தேர்தல் முடிவு வந்தபோது 94 வீதமான மக்கள் எம் கோரிக்கையை ஏற்று தேர்தலை நிராகரித்திருந்தனர். நாம் எல்லோரும் வெற்றி குதூகலிப்பில் இருந்த போது தலைவர் அடுத்த கட்டத்துக்கான வேலையில் இருந்தார்.
இன்றும் தலைவர் சொன்ன அதே வசனம்தான் இந்த இனத்துக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது.
‘இலக்கை நிர்ணயித்து அர்ப்பண உணர்வோடு வேலை செய்தால் எந்த படைபலத்தையும் வெல்லலாம்’ அறுபது அகவை காணும் அந்த அதிமானுடன் எமக்கு நேற்றும் இன்றும் இனி என்றும் வழிகாட்டியாக முன் செல்வார்.
அதுவே இந்த இனத்தின் விடுதலைக்கான பாதை. அவரே இந்த இனத்தின் பேரொளி
**
அவனுக்கு முன்னும் அவனுக்கு பின்னும் அவன் போல் ஒருவன் இல்லை..
எப்படி தமிழர்களின் வீர வரலாற்றில் ராஜராஜ சோழன், அவனுக்குப் பின்னர் இராஜேந்திர சோழன் ஆகிய இருவரும் உயர் பெரும் போர்க்கலையாளர் என்று போற்றப்படுகிறார்களோ… அவர்கள் வரிசையில் போற்றப்படும் உன்னத வீரன் பிரபாகரன்.
உலகத்தின் மிகச்சிறந்த கெரில்லாப் போர் வீரன் என்று பீ.பீ.சி செய்திச் சேவையே பிரபாகரனை தேர்வு செய்து புகழ்ந்தது ஒரு காலம்.
அதையெல்லாம் தாண்டி மரபு ரீதியான படை அமைத்து, போலீஸ் படை அமைத்து, நீதி மன்றுகளை அமைத்து, சமுதாய நிறுவனங்களை உருவாக்கி, வங்கித் தொழிற்பாடுகளை ஏற்படுத்தி, கலைகளை வளர்த்து, கடற்படை அமைத்து, வான்படை அமைக்கும் வரை முன்னேறிய உலகத்தின் ஒரேயொரு வீரன் பிரபாகரன்.
நீர்மூழ்கிக் கப்பலும், வான்படையும் கண்ட ஒரேயொரு தமிழ் வீரன்..
நெப்போலியனோ, அலக்சாண்டரோ, ராஜராஜ சோழனோ எட்டித் தொட்டிருக்காத முகடுகளை எல்லாம் தனது படைப்பிரிவால் எட்டித் தொட்ட ஒரேயொரு போர்த் தலைவன் பிரபாகரன்.
முப்பது ஆண்டு காலம் உலகத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிய மாபெரும் போர்க்காவிய நாயகன்.
அவரைப்போல ஒரு வீரன் ஈழத் தமிழினத்தில் பிறந்தது அந்த இனம் செய்த மாபெரும் பெருமையாகும்.
கன்னடர்களிடம் அடி வாங்கி காயங்களுடன் வந்த தமிழக மக்களும் இந்திய நடுவண் அரசு இருக்கிறதென்றோ, தமிழகத்தில் ஓர் அரசு இருக்கிறது என்றோ பேசவில்லை பிரபாகரன் வருவான் கன்னட வெறியரை உதைக்க என்று பேசியதே வரலாறு.
தமிழ் வீரத்தின் சின்னமாக, தமிழர் மானத்தின் கவசமாக, தமிழர் வாழ்வின் தலை நிமிர்வாக இன்றும் இலங்கும் ஒரேயொரு அடையாளம் தேசியத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களே.
சரியான திட்டமிடுகையும், அதற்கான இடையறாத உழைப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தாலே போதும் இலக்கை எட்டித் தொட்டுவிடலாம் என்று கூறி சின்னஞ்சிறு இனத்தை பென்னம் பெரும் சாதனை படைக்கச் செய்த செயல் வீரன்.
இன்று உலகத்தில் உள்ள போராட்டக்காரரை எல்லாம் நிதி வழங்கி நெறிப்படுத்திக் கொண்டிருப்பது ஐ.நாவில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளே.
இன்றும் உலகப் பயங்கரவாதிகளுக்கு பைனான்ஸ் செய்வது ஐ.நாவில் அங்கத்துவம் பெற்ற நாடுகள்தான், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கான நிதி மத்திய கிழக்கில் இருந்தே போகிறதாக கூறுகிறார்கள்.
ஆனால் உலகத்தில் எந்த நாட்டின் சிந்தனையையும் ஏற்றுக் கொள்ளாது, எந்தவொரு உலக சித்தாந்தங்களையும் தமது சித்தாந்தமாக வரித்துக் கொள்ளாது, நமது நிலத்தோடு கூடிய தமிழ் சித்தாந்தமே என் சித்தாத்தம் என்று உறுதிபட நின்று அதில் கடுகளவும் மாற்றம் செய்யாது போராடியவர் பிரபாகரன்.
- See more at: http://www.asrilanka.com/2015/02/15/27911#sthash.ssWXkegD.dpuf

No comments:

Post a Comment