Saturday, January 10, 2015

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 41வது நினைவு தினம்!



1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 4வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 41வது சிரார்த்ததினம் இன்றாகும்.
41வது சிரார்த்த தினமான இன்றும் இத்துயர சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது.
யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இன்று காலை மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வில் எழுத்தாளரும், பதிப்பாளரும், கல்விமானுமாகிய மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயா அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், பா.கஜதீபன், கனகரட்ணம் விந்தன், பரஞ்சோதி மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன், வலிவடக்கு உப தவிசாளர் சஜீவன், நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து நினைவுக்கூட்டம் இடம்பெற்றது.
இதில் மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயா, மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இங்கு உரையாற்றிய மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள்,
தமிழராய்ச்சி மாநாட்டின்போது நடைபெற்ற சம்பவங்களை மிகத் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் அங்கு திரண்டிருந்த மக்களுக்கு விளக்கிக் கூறினார்.
மேலும் இந்த நினைவுத் தூபியினை அமைப்பதற்கு எடுத்த பல்வேறு முயற்சிகள் பற்றியும், அது பல தடவைகள் அரச படைகளினால் உடைக்கப்பட்டது தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தின்போது வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்ணம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோர் உயிர் நீத்தவர்களாவர்.

No comments:

Post a Comment