இரண்டாம் உலகப்போரின் போது இலங்கை கடலில் மூழ்கிய கட்டலினா எனப்படும் விமானமொன்றில் பாகங்களை கல்குடா கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவான கடற்பரப்பிலிருந்து கண்டுபிடித்ததாக கடல்வள ஆய்வாளர் தர்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டில், வசந்த என்ற மீனவரின் வலையில் சிக்கிய அலுமினியம் தகடொன்றை அடிப்படையாக வைத்து கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
குறித்த விமானத்தின் என்ஜின்கள் இரண்டு, காற்றாடிகள் இரண்டு, சிறகுகள் மற்றும் அதனோடு இணைந்த பகுதிகள் என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டன. இவை, கடல் மட்டத்திலிருந்து 42 மீற்றல் ஆழத்திலிருந்து மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1943ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி, மின்னேரியா விமானப்படைத் தளத்திலிருந்து பயணித்த கெட்டலினா விமானம், சுமார் ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் அதன் என்ஜின் ஒன்று செயலிழந்த நிலையில் மீண்டும் திரும்பியுள்ளது.
இவ்வாறு இந்த விமானம் மீண்டும் திரும்பும் போதே, விபத்துக்குள்ளாகியதாகவும் அதில் பயணித்த விமானப்படை வீரர்கள் 11பேரும் உயிர் தப்பியதாகவும் விமான நிலையத்திலுள்ள புராதன தகவல் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.
திருகோணமலை துறைமுகத்திலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தெற்காகவுள்ள கல்குடா கடற்பரப்பிலேயே இந்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியுள்ளது.
இந்நிலையிலேயே 70 வருடங்களின் பின்னர் இந்த விமானத்தின் அலுமினியத் தகடொன்று மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட போதே குறித்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/84831.html
No comments:
Post a Comment