Tuesday, July 29, 2014

காஸாவிற்காக பழிவாங்குவோம், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்” – மும்பைக்கு தீவிரவாதிகள் மிரட்டல் !


மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தியினைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடிக்கி விடப்பட்டுள்ளன. மும்பை போலீசாருக்கு வந்த ஒரு கடிதத்தில் "காஸா போராட்டத்திற்கு பழிவாங்குவோம்" என்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பக்கத்தை உடைய அக்கடிதமானது மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா பெயருக்கு, மும்பை காவல்துறை கண்காணிப்பு மையத்திற்கு கடந்த வெள்ளியன்று வந்திருந்தது. இதுபற்றி கூறிய ராகேஷ் மரியா, "காஸாவிற்காக நாங்கள் பழிவாங்கப்போகின்றோம்.
1993 இல் நீங்கள் எங்களை தடுத்து விட்டீர்கள். ஆனால், இந்த முறை கண்டிப்பாக முடியாது. உங்களால் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று எழுதி முஜாகிதீன் என்று கையெழுத்து இட்டிருந்தார்கள்" என்று தெரிவித்தார். மேலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதப்பட்ட இக்கடிதத்தில் மும்பையில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். " அதனுடைய உண்மைத் தன்மையை நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். ஆனாலும், இதனை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குற்றவியல் துறையும், எல்லா காவல்நிலையங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன" என்றும் கூறியுள்ளார்.
மேலும் ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மும்பையில் எந்த விபரீதமும் நடந்து விடாமல் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று மும்பை போலீஸாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment