Saturday, July 26, 2014

எச்சரிக்கை பதிவு ( காதலர்கள் கவனிக்க)

காதல் தாகம் காரணமாக மறைவான இடம் தேடிப் போன ஒரு ஜோடி, கயவர்கள் கையில் மாட்டிய கதை இது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தாபுரத்தைச் சேர்ந்த காவியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அவரும் வேலம்பட்டியைச் சேர்ந்த ராஜாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலர்கள். கடந்த 18-ம் தேதி கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள போடம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் அவர்கள் சந்தித்தபோதுதான் இந்தக் கொடூரம் அரங்கேறியிருக்கிறது.

அந்த மாந்தோப்பு சுற்றுலா தலம் அல்ல; பூங்காவும் அல்ல. பாறைகளும் மரங்களும் சூழ்ந்த ஆளரவமற்ற பகுதி. அந்தப் பகுதியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது, நான்கு பேர் அங்கு வந்தனர். நால்வரும் மதுபோதையின் உச்சத்தில் இருந்தனர். தனிமையான இடம்... தலைக்கேறிய போதை... போதாதா?

மூளைக்குள் முரட்டுத்தனம் முறுக்கேறியது. ராஜாவையும் காவியாவையும் வளைத்தனர். ராஜாவை தாக்கி ஒரு மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு அவருடைய கண்முன்னே காவியாவை அந்த நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து சிதைத்தனர். அவர்களின் கதறல் யாருக்கும் கேட்கவில்லை.
ஊருக்குள் இந்த விஷயம் தெரியவந்தபோது, காதலர்கள் மட்டும் கந்தலாகக் கிடந்தனர். நால்வரும் எஸ்கேப். உடனே, போடம்பட்டி கிராம மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுக்க, விடிவதற்குள் அந்த நால்வரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல் துறை.

''இருவரும் ஆறு மாதங்களுக்கு மேலாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் எதிர்ப்பு. அதனால் யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். ஆனால், இந்த முறை விபரீதம் நடந்துவிட்டது. ராஜாவின் காரில்தான் காவியாவும் வந்துள்ளார். இதனை நோட்டம் விட்ட அந்த நான்கு பேரும் பின்தொடர்ந்து வந்து பலாத்காரம் செய்துள்ளனர். காவியா அணிந்திருந்த சேலையை உருவி, அதை வைத்தே ராஜாவை மரத்தில் கட்டிவிட்டு, இந்தப் படுபாதகச் செயலைச் செய்துள்ளனர். பிறகு, ஒவ்வொருவரும் அந்தப் பெண்ணோடு இருப்பதுபோல செல்போனில் ஆபாசப் படம் எடுத்திருக்கிறார்கள். அதை அந்தப் பெண்ணிடம் காட்டி, 'நாங்கள் எப்போது கூப்பிட்டாலும் நீ வர வேண்டும்’ என்றும் மிரட்டியிருக்கிறார்கள். அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் இதைப் பார்த்துவிட்டு, ஊருக்குள் சொல்வதற்காக ஓடியிருக்கிறார். அவரைப் பார்த்துவிட்ட இந்த நான்கு பேரும் அந்த ஆடு மேய்ப்பவரைத் துரத்தி அடித்திருக்கிறார்கள். அவர் ஊருக்குள் ஓடிப்போய் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்'' என்று விவரிக்கிறது போலீஸ் வட்டாரம்.

பலாத்காரம் செய்யும்போதும், செல்போனில் படம் எடுக்கும்போதும் தங்கள் பெயரை அந்த நான்கு பேரும் சொல்லியிருக்கிறார்கள். ராஜாவும் காவியாவும் சொன்ன அடையாளங்களை வைத்து அந்தப் பகுதியில் டிரைவர்களாக இருக்கும் பிரகாஷ், சுப்பிரமணி, மணி, பிரகாஷ் ஆகிய நான்கு பேரை போலீஸார் கண்டு பிடித்தனர். ''அவர்களிடம் உள்ள செல்போன்களை பறிமுதல் செய்து பார்த்ததில் அவர்கள் அந்தப் பெண்ணுடன் இருந்த படங்கள் இருந்தன. அதை பறிமுதல் செய்துவிட்டோம். அவர்கள் நான்கு பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்'' என்று சொல்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

''அந்த காரை காலை பத்து மணிக்கே அந்த வட்டாரத்துல பார்த்தோம். யாரோ தண்ணி அடிக்க வந்திருப்பாங்கன்னு நினைச்சோம். ஆனா அந்த கார் சாயங்காலம் வரை அப்படியே நின்னது. அதுக்குப் பிறகுதான் சந்தேகம் வந்துள்ளது'' என்றனர் ஊர் மக்கள்.

''இந்தப் பகுதியில் மறைவான இடங்கள் நிறைய இருக்கிறது. இளம் ஜோடிகள் நிறையப் பேர் வந்து போகிறார்கள். சமூக விரோதிகளும் அதிகமாக வந்து செல்கிறார்கள். குடிக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள், திருடி வந்த பொருட்களைப் பங்கு பிரிக்கிறார்கள். அவர்கள் கையில் இந்த காதல் ஜோடிகள் சிக்கினால் என்ன ஆவார்கள் என்பதற்கு உதாரணமான சம்பவம் இது. காதலிப்பவர்கள் தங்கள் காதலை மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகக் கண்காணாத இடத்தைத் தேடிச் செல்கிறார்கள். அந்த இடங்கள் அனைத்தும் உயிருக்கு ஆபத்தான இடங்கள் என்பதை உணர வேண்டும்'' என்று அந்த ஊர் மக்களும் போலீஸாரும் சொல்கிறார்கள்.

காதல் மனத்துக்குள் மறைவாக இருக்கலாம்; மறைவான இடங்களில் காதலர்கள் இருப்பதுதான் ஆபத்து.

நன்றி ஜுனியர் விகடன்
 —

No comments:

Post a Comment