வீடு ஒன்றில் பணிபுரிந்து வந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை 60 வயதுடைய நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதால் சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
லிந்துலை நகரத்தில் உள்ள பெருபான்மை இனத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே 14 வயதுடைய சிறுமியை இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனையை அண்மித்த தோட்டமொன்றில் குடும்ப வறுமை காரணமாக 14 வயதுடைய சிறுமி தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்தி விட்டு நகரத்தில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 60 வயதுடைய வர்த்தகரின் வீட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். சம்மந்தப்பட்ட வர்த்தகரின் முதல் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிவதோடு 3 பிள்ளைகளும் உள்ளனர்.
இவரின் மனைவி தன்னை விட்டுப் பிரிந்ததால் இரண்டாவது திருமணம் முடித்துள்ளார். சம்மதப்பட்ட வர்த்தகர் இரு மனைவிமாரையும் விவாகரத்துச் செய்துள்ளார். இவர் தனிமையில் இருந்த போது சம்மந்தப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என குறித்த சிறுமியின் தரப்பினர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த வர்த்தகரை கைது செய்வதற்காக தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்ட போது, வர்த்தகர் தலைமறைவாகியுள்ளார். எனினும் நேற்று செவ்வாய்க்கிழமை சட்டதரணியுடன் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். இவரை பொலிஸார் கைது செய்து நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். சிறுமி தற்போது 7மாத கர்ப்பிணியாக இருப்பதோடு குடும்ப வறுமை காரணமாக உடுதுணிகள் வாங்க முடியாத நிலையில் இருக்கின்றமை குறிப்பிடதக்கது.