Sunday, June 29, 2014

கிழக்கு மாகாணத்தில் முதலாவது சொகுசு பஸ் சேவை - பேருவல மற்றும் தர்ஹாநகரில் இலவச மருத்துவ முகாம்!



இலங்கை போக்குவரத்துச் சபையினால் கிழக்கு மாகாணத்தில் முதலாவது சொகுசு பஸ் வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு வழங்கும் நிகழ்வு வாழைச்சேனையில் நேற்று நடைபெற்றது.
வாழைச்சேனை போக்குவரத்து சாலை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சொகுசு பஸ்ஸினை சாலை முகாமையாளரிடம் கையளித்தார்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளுக்கிணங்க போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் இந்த பஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் இரவு 9.00 மணிக்கு காத்தான்குடியில் இருந்து புறப்பட்டு பாசிக்குடா வழியாக கொழும்புக்குச் சென்று, மறுநாள் இரவு கொழும்பில் இருந்து பாசிக்குடா வழியாக காத்தான்குடியை சென்றடையும் என்றும், இச்சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் சாலை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், இணைப்பாளரான திருமதி.ருத்ரமலர் ஞானபாஸ்கரன், வாழைச்சேனை பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பேருவல மற்றும் தர்ஹாநகரில் இலவச மருத்துவ முகாம்
கல்குடா அல் கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேருவல மற்றும் தர்ஹாநகர் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை பேருவல மற்றும் தர்ஹாநகர் பகுதிகளில் இடம்பெற்றது.
கல்குடா அல் கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி, எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) தலைமையில் சென்ற குழுவினராலேயே இவ் இலவச வைத்திய முகாம் நடாத்தப்பட்டது.
இவ்வைத்திய முகாமில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பீ.எம்.பிர்னாஸ் மற்றும் அக்குபஞ்சர் இந்திய வைத்தியர் முகம்மட் றாபி ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmw0.html

No comments:

Post a Comment