Saturday, May 24, 2014

மட்டக்களப்பில் மாமியாரின் நகைகளைக் கொள்ளையிட்ட மருமகன் கைது

மாமியாரின் இரும்புப் பெட்டகத்தை உடைத்து நகைகளைக் கொள்ளையிட்ட மருமகனை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கோயிலுக்குச் சென்ற பின்னர் தனது வீட்டில் இருந்த இரும்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த தங்க வளையல் கொள்ளையிடப்பட்டுள்ளதாக நேற்று மட்டக்களப்பு புதூர் எல்லை வீதியைச் சேர்ந்த ஞானசேகரம் பரிமலர் (60 வயது) என்ற பெண் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சம்பத் பெரேராவின் வழிகாட்டலில், பொலிஸ் அதிகாரிகளான ஏ.ரி.எம்.சுபியான் (61217), தமிழ்ச்செல்வன் (67995), மஜீத்(80044), பிரியங்கர (66426) ஆகிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையினை அடுத்து முறைப்பாட்டாளரின் மருமகனான கந்தசாமி ரவிக்குமாரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து அவரிடமிருந்து ஒன்றரைப் பவுண் வளையலை மீட்டுள்ளதாகவும் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment