Thursday, March 20, 2014

பாம்பு கடித்து இறந்தவர் 11 ஆண்டுக்கு பின் திரும்பிய அதிசயம்

பாம்பு கடித்து இறந்து போன வாலிபர் 11 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பியது உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பரேலி தேவர்னியா பகுதியில் உள்ளது பத்வா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சத்ராபால் (25) என்ற வாலிபரை பாம்பு கடித்து விட்டது. அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் கருதினர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுடைய வழக்கப்படி சத்ராபாலின் சடலத்தை ஆற்றில் வீசி இறுதி சடங்கு செய்து விட்டனர். சத்ராபாலின் மனைவி ஊர்மிளா, அப்போது கர்ப்பமாக இருந்தார். கணவன் இறந்த 2 மாதங்களுக்கு பிறகு ஊர்மிளாவுக்கு அபார்ஷன் ஆகிவிட்டது. இளம் வயதில் கணவனை இழந்ததால், அவருக்கு சத்ராபாலின் தம்பியை திருமணம் செய்து வைத்தனர்.
அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு சத்ராபால் உயிருடன் கிராமத்துக்கு கடந்த திங்கட்கிழமை திரும்பி வந்தார்.
அவரை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடந்தவை குறித்து சத்ராபால் கூறுகையில், பாம்பு கடித்து இறந்ததாக நினைத்து ஆற்றில் சடலத்தை வீசியுள்ளனர். ஆற்றில் மிதந்து சென்ற சடலத்தை பாம்பாட்டிகள் சிலர் மீட்டு சிகிச்சை அளித்து காப்பாற்றினர் என்று கூறியுள்ளார்.
இப்போது சத்ராபால் அவருடைய தம்பி இருவரையுமே, தனது கணவன்களாக ஊர்மிளா நினைக்கிறார். மேலும் இந்த பிரச்சனையில் குடும்பத்தினர் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment