Friday, February 28, 2014

“அண்ணை றைற்” புகழ் கே. எஸ். பாலச்சந்திரன் கனடாவில் காலமானார்

உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்த இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், இலங்கை வானொலி நடிகர்களில் பெயர் சொல்லக்கூடிய கே.எஸ். புhலச்சந்திரன் ஏறத்தாள 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்திருந்தார்.
தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.
1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய ‘புரோக்கர் பொன்னம்பலம்’ என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.
இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுதியவர். தொடர் நாடகங்களில் கிராமத்துக் கனவுகள் இவரது பிறந்த இடமான கரவெட்டியை பின்னணியாக கொண்டிருப்பதும், வாத்தியார் வீட்டில் இவர் வாழ்ந்த இடமான இணுவிலை பின்னணியாகக் கொண்டிருப்பதும் தனிச்சிறப்பாகும்.
‘மனமே மனமே’ என்ற தொடர் நாடகத்தை எழுதி, இயக்கி தயாரித்து வழங்கியிருக்கிறார். கனவுகளும் தீவுகளும், தலைமுறைகள், குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய், காரோட்டம், கலாட்டாக்காரர்கள் முதலான 20க்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றியுள்ளார்.
தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் ‘மலர் மணாளன்’ என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல ‘சிரிகதை’களை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத் துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார். ஐரோப்பாவில் வெளிவரும் ‘ஒரு பேப்பர்’ என்ற பத்திரிகையில் ‘கடந்தது.. நடந்தது’ எனும் நகைச்சுவை கட்டுரைத் தொடரையும், கனடாவில் ‘தாய் வீடு’ பத்திரிகையில் வாழ்வியல் சம்பந்தமான கட்டுரைத் தொடரையும், ‘தமிழ் ரைம்’ சஞ்சிகையில் ‘என் கலைவாழ்வில்’ என்ற அனுபவத்தொடரையும் எழுதியவர். அண்மையில் தாய்வீடு பத்திரிகையில் , ‘வாத்தியார் வீட்டிலிருந்து வான்கூவர் வரை’ என்ற தொடரையும், ‘தூறல்’ என்ற காலாண்டு சஞ்சிகையில் ‘என் மனவானில்’ என்ற தொடரையும் எழுதி வந்தார்.
இலங்கையில் ரூபவாகினிக்காகவும், கனடாவிலுள்ள ரிவிஐ தொலைக்காட்சிக்காகவும் இவர் பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதியிருந்தார். அவற்றில் திருப்பங்கள் குறிப்பிடத்தக்கது. 2003ல் இவர் ஒளிபரப்பிய ‘Wonderful Y.T.Lingam Show’ இவரது படைப்பு எம்மிடையே முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி யாகும். ‘நாதன், நீதன், நேதன்’ என்ற நகைச்சுவைதொடரை 2007 இலிருந்து 6 மாதங்களாக எழுதி, நெறிப்படுத்தி ஒளிபரப்புச் செய்தார்.
கனவுகளும் தீவுகளும், தலைமுறைகள், குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய், காரோட்டம், கலாட்டாக்காரர்கள் முதலான 20க்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றியுள்ளார்.
‘வாடைக்காற்று’, ‘நாடு போற்ற வாழ்க’, ‘நான் உங்கள் தோழன்’, ‘அவள் ஒரு ஜீவ நதி’ போன்ற படங்கள் இவரின் ஈழத்து சினிமா உலகின் பங்களிப்புக்கள்.
இலங்கையில் வாடைக்காற்று, Blendings (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனராகவும் செயற்பட்டவர். இவர் தாகம், வாழ்வு எனும் வட்டம் (சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது), உனக்கு ஒரு நீதி (சிறந்த இசைக்கான விருது பெற்றது) ஆகிய குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
1992ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியா- இலங்கை டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டித் தொடரிலும், அதே ஆண்டில் நியூசிலாந்து- இலங்கை அணிகளின் டெஸ்ட் ஆட்டத் தொடரிலும் வானொலி நேர்முக வர்ணனையளராக பங்காற்றியவர். 1991ல் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது தெற்காசிய கூட்டமைப்பின் விளையாட்டு போட்டிகளின் போது, கூடைப் பந்தாட்டத்தின் வானொலி நேர்முக வர்ணனையாளராக பணியாற்றியவர்.
இலங்கை வானொலியில், ‘கலைக்கோலம்’ சஞ்சிகை நிகழ்ச்சியையும், ‘விவேகச் சக்கரம்’ என்ற பொதுஅறிவுப் போட்டி நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கியிருக்கிறார். 1973ல் இலங்கை வானொலி நிலையத்தில் ரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய ‘அண்ணை றைற்’ இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும்.
அண்ணை றைற், ஓடலி இராசையா, தியேட்டரில் உள்ளிட்ட தனி நடிப்பு நிகழ்ச்சிகள் இறுவட்டாக வெளிவந்துள்ளன. இவர் கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நூல்), (புதினம், 2009, வடலி வெளியீடு), நேற்றுப் போல இருக்கிறது, (கட்டுரைத் தொகுப்பு, 2011,கனகா பதிப்பக வெளியீடு) ஆகிய நூல்களை வெளியிட்டார்.
கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ என்ற புதின நூலுக்கு 2009ம் அண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தது. அவர் எழுதிய ‘நேற்றுப் போல இருக்கிறது’ என்ற கட்டுரைத் தொகுப்பு இலங்கை சாகித்ய விருதுக்காக சிறந்த நூலாக நானாவித பிரிவில் தேர்ந்தெடுக்கபட்டது. ‘ நேற்றுப் போல இருக்கிறது’ என்ற கட்டுரைத் தொகுப்பு 2011ல் இலங்கை இலக்கியப் பேரவை – யாழ் இலக்கியவட்டம் வழங்கிய சிறந்த நூலுக்கான (நானாவிதப்பிரிவு) விருதையும் பெற்றது.

கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரம். 
அன்னாரின் பூதவுடல் பெப்பிரவரி 28, மார்ச் 01 வெள்ளி, சனி இரு நாட்களும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை Warden/Sheppard சந்திப்பிலுள்ள Highland Funeral Homeஇல் (3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3) இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டு, மார்ச் 2ம் நாள் ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணிவரை அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Woodbine/Kingston சந்திப்பிலுள்ள St. John’s Norway Cemetery & Crematorium இல்(256 Kingston Rd, Toronto, ON M4L 1S7) தகனம் செய்யப்படும்.
http://www.canadamirror.com/canada/22449.html

No comments:

Post a Comment