Sunday, April 14, 2013

பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் காலமானார்!!


பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் காலமானார்


பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

1930. செப்.22ம் தேதி தற்போதைய ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்தவர் பிபி.ஸ்ரீனிவாஸ். பனிந்திரஸ்வாமி, சேஷகிரியம்மா தம்பதிக்குப் பிறந்த ஸ்ரீனிவாஸின் முன்னோர்கள் பசலபுடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

கல்லூரியில் பி.காம் படித்துள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என எட்டு மொழிகளை அறிந்தவர். தெலுங்கு மொழியில் கஸல் போன்ற பாடல்களை அதிகம் பாடியுள்ளார். கீதா தத், சம்ஷத் பேகம், ஜிக்கி ஆகியோருடன் இணைந்து பாடல்கள் பல பாடியுள்ளார்.

ஆர்.நாகேந்திர ராவின் ஜாதக பலம் (ஜாதகம்) என்ற படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் திரைப்படப் பாடலில் பாடி அறிமுகமானார்.

ஜெமினியின் ஹிந்திப் படமான மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் 1952ல் ஹிந்திக்கும் அறிமுகமானார். ஹரிச்சந்திரா என்ற மலையாளப் படத்தில் 1955ல் அறிமுகமான பி.பி.ஸ்ரீனிவாஸ், பிரேம பாசம் படத்தில் பி.சுசீலாவுடன் டூயட் பாடல் பாடி அசத்தினார். பின்னாளில் கன்னட திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ராஜ்குமாருக்கும், தமிழில் ஜெமினி கணேசனுக்கும் அதிக பாடல்கள் பாடி, இவர்களுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலே சரியாக வரும் என்ற அளவுக்கு திரையுலகில் பேசப்பட்டார். மேலும் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஆகியோருக்கு பின்னணிக் குரல் கொடுத்து, திரைப் பாடல்களை பாமர ரசிகர்களும் அதிகம் கேட்டு விரும்ப வைத்தார்.

கண்ணதாசன் எழுதிய காலங்களில் அவள் வசந்தம் பாடல், அடுத்த வீட்டுப் பெண் படப் பாடல் என இவரின் பாடல்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப் படுகிறது. பி.சுசீலா, எஸ்.ஜானகி, பி.பானுமதி, கே.ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஸ்கர் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் காலத்தால் அழியாதவை.

திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாது, பக்திப் பாடல்கள், சுலோகங்கள், தோத்திரங்களும் இவர் அதிகம் பாடியுள்ளார். சாரதா புஜங்க ஸ்தோத்திரம், ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம், முகுந்த மாலை, ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்தோத்ரம், புரந்தரதாஸர் தேவநாமாக்கள் என இவர் பாடிய ஸ்தோத்திரங்கள் இன்றளவும் அன்பர்களால் கேட்டு ரசிக்கப்படுகின்றன.

சென்னையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை அண்ணாசாலையை ஒட்டிய உட்லேண்ட்ஸ் ஹோட்டல் திறந்த வெளி பகுதியில் (தற்போதைய செம்மொழிப் பூங்கா பகுதி) தினந்தோறும் வந்து, தன் நண்பர்களுடன் உரையாடிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். மாலை நேரங்களில் தன் வயதையும் மறந்து, இளம் நண்பர்களுடனும், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் என அனைவரிடமும் அமர்ந்து பேசிப் பொழுது கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த அனுபவங்களை வைத்து, ஹோம் அவே ஃப்ரம் ஹோம் என்ற ஒரு தொகுப்பையும் எழுதினார் ஸ்ரீனிவாஸ்.

பல்வேறு நாடக மன்றங்கள், இசை அமைப்புகளில் தலைமையும் பங்கேற்பும் கொண்டிருந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.


"உங்க பொன்னான கைகள்"
"விஸ்வநாதன் வேலை வேணும்"
"நிலவே என்னிடம் நெருங்காதே"
"காலங்களில் அவள் வசந்தம்"
"ரோஜா மலரே ராஜகுமாரி" 

போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய தனித்துவமான பி.பி.எஸ்யின் குரல் அடங்கியது. ஆழ்ந்த இரங்கல்கள்.


http://dinamani.com/

No comments:

Post a Comment