Monday, February 4, 2013

ஒன்பது கின்னஸ் சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனை நினைத்ததுன்டா?


வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் அதாவது ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த நீச்சல் வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்கு நீரிணையை ஒரே தடவையில் நீந்திக் கடந்தார் ஆனந்தன்.
1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார்.
அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் இவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.
சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.
ஆழிக்குமரன் ஆனந்தன் படைத்த ஒன்பது கின்னஸ் சாதனைகளும் பின்வருமாறு,
சாதனை 1) 1971 ஆம் ஆண்டில் பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்திக் கடந்தது,
சாதனை 2) 1978 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 128 மணி நேரம் Twist Dance (60 களில் பிரசித்தி பெற்ற ஒரு வகை நடனம்) ஆடியது,
சாதனை 3) 1979 ஆம் ஆண்டில் 1487 மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இரு சக்கர வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தமை,
சாதனை 4) 1979 ஆம் ஆண்டில் 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றமை,
சாதனை 5) 1979 ஆம் ஆண்டில் 136 மணி நேரம் Ball Punching செய்தமை,
சாதனை 6) 1980 ஆம் ஆண்டில் 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்தது (Sit-ups),
சாதனை 7) 1980 ஆம் ஆண்டில் 9100 தடவைகள் High Kicks செய்தமை,
சாதனை 8) 1981 ஆம் ஆண்டில் 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் இடைவிடாது நடந்து கடந்தமை,
சாதனை 9) 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் (சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில்) செங்குத்தாக நின்றமை.
மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றின் விளைவால் இவரது மண்ணீரலை அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.
ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியின்போது 06 மணி நேர துணிகர முயற்சியின் பின், வலுவான சாதகம் அற்ற நீரோட்டத்தாலும் , நீரின் குறைந்த வெப்ப நிலையாலும் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின்போதே மரணத்தையும் தழுவிக் கொண்டார்.
‘குளிர்ந்த கடலே கவலை தருகிறது, அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை’ என்று சாதனை முயற்சியின்போது இவர் தெரிவித்தார்.
இதுதான் அவர் 1984 ஆம் ஆண்டு ஓகஸ்து 06 ஆம் திகதி ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியின்போது இறக்கும் முன்னர் கூறிய கடைசி வார்த்தை.
ஆழிக்குமரன் ஆனந்தன் கின்னஸ் சாதனைகளைப் படைத்தது மட்டுமன்றி, இலண்டன் பல்கலை கழகத்தில் விஞ்ஞான பட்டதாரி பட்டத்தையும் இலங்கையில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்று கல்வியிலும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment