Saturday, July 28, 2012

டென்மார்க் வாழ் தமிழருக்கு நல்ல செய்தி


டென்மார்க் வாழ் தமிழருக்கு நல்ல செய்தி

உலகம் முழுவதும் வாழும் தமிழருக்கு இது தலை நிமிர்வு….

டென்மார்க்கில் வாழும் 11.000 தமிழர்களும் பெருமைப்படக்கூடிய செய்தி கிறிஸ்லி டவ்பிலத பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

டென்மார்க்கில் வாழும் சிறுபான்மை இனங்களில் முத்திரை பதித்த வெற்றி வாழ்வு வாழும் இனமாக ஈழத் தமிழர்கள் தேர்வாகியுள்ளனர்.

எத்தனையோ இனங்கள் எல்லாம் டென்மார்க்கில் வாழ்ந்தும் சுமார் 25 வருடங்களில் அனைவரையும் வென்று இவர்கள் டேனிஸ்காரருக்கு இணையான இனமாக முன்னேறியது எப்படி ?

முதலாவது வேலை செய்யும் பண்பு..

டென்மார்க்கில் பொருளாதார நெருக்கடி நிலவினாலும் பெருந்தொகையான தமிழர்கள் வேலைச் சந்தையில் இன்றும் இருக்கிறார்கள்.

அவர்களை வேலைத்தலத்தில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று தொழில் வழங்குவோர் கருதுமளவுக்கு கடும் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்ந்தாலும் பெரும்பாலான தமிழர்கள் யூலன்ட் பகுதியில் வாழ்கிறார்கள் என்றும் அது எழுதியுள்ளது.

மேலும் தமிழ் இளையோரின் உயர் கல்வி முயற்சிகளும் தமிழர்களை சிறந்ததோர் இனமாக மாற்றியிருக்கிறது.

18 – 24 வயதுக்குட்பட்ட தமிழரில் 56 வீதமான இளைஞர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு சென்றுள்ளார்கள், கல்வி மீது இவர்கள் கொண்ட நாட்டம் இதே வயதுள்ள டேனிஸ் இளைஞர்களுக்கே பெரும் சவாலாக இருக்கிறது.

மேலும் பொருளாதார ரீதியாகவும் சொந்த வீடுகள், வாகனங்களை வைத்து சிறந்த வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் டேனிஸ்காரருக்கு அடுத்தபடியாக சிறந்த இனமாக வந்த தமிழர்கள் இப்போது மேலும் ஒரு படி உயர்வைக் கண்டுள்ளார்கள்.

புதிய டேனிஸ்காரர் அமைப்பின் தலைவர் ரோபன் மூலர் கூறும்போது வேலை செய்வது, சொந்தக்காலில் நிற்பது, ஜனநாயக முறையை புரிந்து அதன்படி வாழ்வது, கல்வியில் நாட்டம் கொள்வது இவைகள் ஓரினத்திடம் சரியாக அமைந்தால் அந்த இனம் இணைவாக்கமடைந்துவிட்ட இனமாகும் என்று குறிப்பிட்டார்.

ஆகவே வெளிநாட்டவரை இணைவாக்கம் அடையச் செய்ய வேண்டும் என்ற பிரச்சாரங்களில் தமிழரை இணைக்க வேண்டிய தேவையில்லை அவர்கள் இணைவாக்கமடைந்துவிட்டார்கள் என்பது கருத்தாகும்.

தமிழர்கள் மட்டுமே டென்மார்க்கில் குடியேறி 25 வருடங்களாகிவிட்டது என்று வெள்ளிவிழா கொண்டாடிய ஒரேயொரு உலக இனமாகும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த செய்தி டென்மார்க் தொலைக்காட்சி சேவை ஒன்றின் ரெக்ஸ் ரீ.வி 161ம் இலக்கத்திலும் வெளியாகி முழு டென்மார்க்கிற்கும் சென்றடைந்துள்ளது.

ஆனால் தமிழர்கள் தரப்பில் சிந்திக்க வேண்டிய விடயங்களும் உள்ளமை கவனிக்கத்தக்கது.

56 வீதமான இளையோர் உயர் கல்விக்கு சென்றால் மிகுதி 44 வீதமானவர்களுக்கு என்ன நடந்தது என்பது முக்கிய கேள்வியாகும்.

ஆகவே வரும் பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 75 வீதமாக உயர்த்த பாடுபட வேண்டிய சமுதாயக் கடமை இருக்கிறது.

ஜனநாயகப் புரிதல் தமிழரிடையே எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதும் ஆய்வுக்குரிய விடயமாக உள்ளது.

ஆனால் அடுத்த தலைமுறைத் தமிழர் இதை மேலும் சிறப்பாக கொண்டு செல்வர் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

டென்மார்க்கில் தமிழர் பெற்றுள்ள வெற்றி புலம் பெயர்ந்த அத்தனை நாடுகளுக்கும் பெருமை தருவதாகும், டென்மார்க்கைப் போலவே மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர் உயர்வு உள்ளதை மறுக்க இயலாது.

கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மனி போன்ற நாடுகளில் தமிழர்கள் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரீசில் லா சப்பேல் என்கிறன்ற வர்த்தக சாம்ராஜ்ஜியத்தையே தமிழன் கட்டியிருக்கிறான், யாழ்ப்பாண நகரத்தையே தூக்கிச் சாப்பிடுமளவிற்கு உயர்வு கண்டுள்ளான்.

கனடாவில் தமிழன் கண்டுள்ள உயர்வு வானுயர்ந்த சாதனையாகும், இங்கிலாந்தில் நீண்ட வரலாற்றோடு வாழ்கிறான்.

இதுபோல நோர்வே, சுவீடன், கொலன்ட், இத்தாலி, பின்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் அவன் கொடி பறக்கிறது.

இதை முன்னுதாரணமாக வைத்து இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் மக்கள் கல்வியிலும் உழைப்பிலும் முன்னேற வேண்டும் என்பதையும் மறுக்க இயலாது.

யாழ். குடாநாடு, கல்வியிலும் உழைப்பிலும் இலங்கையிலேயே பின்தங்கிய பகுதியாக இருப்பதை மறுக்க இயலாது, அதில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

No comments:

Post a Comment