Saturday, July 7, 2012

25 வயது இளம்பெண்ணின் அபரிமிதமான வளர்ச்சியால் பெற்றோர்கள் கவலை


மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் பலுர்காட் பகுதியில் சித்திகா பர்வின் (25) என்ற பெண் வசிக்கின்றார்.
சித்திகா பிறந்த சில ஆண்டுகள் வரை இவரது வளர்ச்சி மற்றவர்களை போலவே இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரின் அபரிமிதமான வளர்ச்சி அவரது பெற்றோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தொடக்கத்தில் ஆரோக்கியமான வளர்ச்சி என்று மகிழ்ச்சியடைந்த பெற்றோர், சித்திகாவின் அபரிமித வளர்ச்சியை பார்த்து பயந்தனர்.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில் சித்திகாவுக்கு ஹார்மோன் கோளாறு இருப்பது தெரிந்தது. இதற்கு டொக்டர்கள் மருந்து, மாத்திரைகள் அளித்தனர். அவற்றாலும் சித்திகாவின் பிரம்மாண்ட வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.
இப்போது சித்திகா 8 அடி உயரமும் 160 கிலோ எடையும் இருக்கிறார். உயரம் மற்றும் எடை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
3 மாதங்களுக்கு முன்பு சித்திகா 7.6 அடி உயரமும் 140 கிலோ எடையும் இருந்ததாக அவரது தாயார் மோன்சுரா பிபி தெரிவித்தார். சித்திகாவுக்கு அசுர பசி எடுக்கும் என்றும் தினமும் 6 கிலோ சாதம் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவார் என்று அவர் கூறினார்.
இதில் கொடுமை என்னவென்றால், மகளுக்கு வயிற்று பசிக்கு போதுமான அளவு உணவு கொடுக்க கூட பெற்றோரால் முடியவில்லை. காரணம், சித்திகாவின் தந்தை கூலித் தொழிலாளி. தினமும் அவருக்கு கிடைக்கும் சொற்ப வருமானம் சித்திகாவின் பசிக்கு சோறுபோட போதவில்லை.
சித்திகாவுக்கு உணவு கொடுப்பதற்காகவே நிறைய கடன் வாங்கியதாகவும் தாய் மோன்சுரா கூறினார்.
கடந்த 2ம் திகதி பலுர்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சித்திகா சேர்க்கப்பட்டார். மூளைக்கு அடியில் உள்ள பிட்யூட்டரி கிளாண்ட் எனப்படும் நாளமில்லா சுரப்பியில் ஏற்பட்டுள்ள கோளாறே சித்திகாவின் பூதாகர வளர்ச்சிக்கு காரணம் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டொக்டர் சென்சர்மா தெரிவித்தார்.
மேல் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவமனைக்கு சித்திகாவை அனுப்ப இருப்பதாகவும் சென்சர்மா கூறினார்.
குடும்பம் வறுமையில் வாடும் நிலையில், சித்திகாவின் சிகிச்சைக்கு என்ன செலவாகும் என்று தெரியவில்லை என்று மோன்சுரா கண்ணீருடன் தெரிவித்தார்.
தினாஜ்பூர் மாவட்ட கலெக்டர் துர்காதாஸ் கோஸ்வாமி கூறுகையில், அரசு உதவி கேட்டு மாவட்ட நிர்வாகத்தை சித்திகா குடும்பத்தார் அணுகினால், அதுபற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment