Wednesday, June 20, 2012

இலங்கையிலே மிக உயரமான மனிதர் ஒரு முன்னாள் போராளி!!!



இலங்கையிலே மிக உயரமான மனிதராக கருதப்படுபவர் தற்போது பொலனறுவை மாவட்டத்திலுள்ள கண்டக்காடு புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வு பெற்றுவரும் ஒரு முன்னாள் போராளியாவார்.
குணசிங்கம் கஜேந்திரன் என்ற இந்த முன்னாள் போராளியின் உயரம் 7 அடி 3 அங்குலமாகும். இவர் 2009 மே 17ம் நாள் இராணுவத்தினரிடம் சரணடைந்து பூசா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த பெப்ரவரி 22ம் நாள் கண்டக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு இவர் மாற்றப்பட்டார். 33 வயதான கஜேந்திரன், சாவகச்சேரியை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இலங்கையில் மிக உயரமான மனிதராகக் கருதப்படும் அவர், தனது உயரத்தினால் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.

“ஏனையோரைப் போல பேரூந்துகளில் பயணிக்க முடியவில்லை. சாதாரணமாக வீடுகளில் உள்ள கதவுகள் வழியாக கடந்து செல்ல முடியவில்லை. குனிந்து கொண்டே செல்ல வேண்டியுள்ளது.

உடல்நல ரீதியாகவும் இந்த உயரத்தினால் சிரமப்பட வேண்டியுள்ளது. அதிக நேரம் நிற்கவோ, நடக்கவோ, அமர்ந்திருக்கவோ முடியவில்லை. வெளியே செல்லும் போது மற்றவர்கள் நிமிர்ந்து பார்ப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறுகிறார்.

ஆனால், இந்த உயரம் தனக்கு சிலவேளைகளில் உதவியாக அமைவதாகவும் கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாக வீடுகளில் மின்குமிழ்களை மாற்றுவதற்குக் கூட மற்றவர்கள் உயரமான ஒரு பொருளைத்தேட வேண்டியுள்ளது.

ஆனால் தனக்கு அவ்வாறு உயரமான பொருளை வைக்காமலேயே மின்குமிழ்களை மாற்ற முடிவதாக அவர் கூறுகிறார். ஒரு ஆண்டுக்கு கண்டக்காடு முகாமில் புனர்வாழ்வு மற்றும் தொழிற்பயிற்சியைப் பெற்ற பின்னர் இவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.tamilwin.com/show-RUmqyGRUOXlrz.html


No comments:

Post a Comment