Tuesday, June 12, 2012

பிரித்தானிய குடிவரவுக் கொள்கையில் பாரிய மாற்றம்!!



பிரித்தானிய அரசாங்கம் தனது குடிவரவுக் கொள்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

மனித உரிமை சட்டங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு குற்றவாளிகள் ஐக்கிய இராச்சியத்தில் நுழைவதை தடுப்பதற்கும் நாடுகடத்தல்களை தவிர்ப்பதற்கும் குடியேறுபவர்கள் தமது குடும்ப வாழ்க்கையை சொந்த நிதியியில் மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடும்ப குடிவரவு சலுகைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதையும் அரச சேவை மீதான அழுத்தங்களை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய குடிவரவுக் கொள்கையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதுடன் இம்மாற்றங்களில் பெரும்பாலானவை 2012 ஜூலை 9 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளன.

முக்கிய மாற்றங்களில் பின்வருவனவும் அடங்கும்:

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத வாழ்க்கைத்துணை, ஐக்கிய இராச்சியத்தில் குடியேறுவதற்கு அனுசரணை வழங்குவதற்கு குறைந்தபட்சம் 18,600 ஸ்ரேலிங் பவுண் வருமானத்தை கொண்டிருக்க வேண்டும்.

தங்கிவாழும் பிள்ளைகள் குடியேறுவதற்கு அனுசரணை வழங்குவதற்கு மேலும் உயர்ந்த வருமானம் கோரப்படும். ஒரு பிள்ளைக்கு அனுசரணை வழங்குவதற்கு 22,400 ஸ்ரேலிங் பவுண் வருமானத்தை கொண்டிருக்க வேண்டும். அதற்கடுத்த ஒவ்வொரு பிள்ளைக்கும் அனுசரணை வழங்க தலா 2400 ஸ்ரேலிங் பவுண் மேலதிக வருமானத்தை கொண்டிருக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத வாழ்க்கைத் துணை குடியமர்வதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னரான தகுதிகாண் காலம் 2 வருடங்களிலிருந்து 4 வருடங்களாக உயர்த்தப்படும். உறவு முறையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் போலியான திருமணங்களை தடுப்பதற்கும் இவ்விதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தம்பதியொன்று ஐந்துவருட நன்னடத்தை காலத்தை பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்சம் 4 வருடங்கள் வெளிநாட்டில் ஒன்றாக வசிக்குமாறு கோரப்படுதல். இது, வெளிநாட்டு வாழ்க்கைத் துணை உடனடியாக ஐக்கிய இராச்சியத்தில் குடியேறுவதற்கு வாய்ப்பளிக்கும் தற்போதைய முறைமையை மாற்றும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத, வயதுவந்த மற்றும் முதிய தங்கிவாழும் உறவினர்கள், ஐக்கிய இராச்சியத்தில் குடியேறுவதற்கு அனுமதிப்பது, வயதினால் மற்றும் சுகவீனம் மற்றும் அங்கவீனத்தினால் தேவைப்படும் பராமரிப்பானது பொதுமக்களின் பணத்தில் அல்லாமல் உறவினரால் வழங்கப்படும் என்பது வெளிப்படுத்தப்படும் நிலையிலேயே அனுமதிக்கப்படும். இதற்கு வெளிநாடுகளிலிருந்தே விண்ணப்பிக்க வேண்டும்.

2013 ஒக்டோபரிலிருந்து, விதிவிலக்கான நிலைமைகள் தவிர, குடியேறுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் 'ஐக்கிய இராச்சியத்தில் வாழ்க்கை' பரீட்சையில் சித்திபெறுவதுடன் ஆங்கில பேச்சு மற்றும் செவிமடுத்தல் தகுதிக்கான இடைநிலை மட்ட பரீட்சையில் சித்தி பெற வேண்டும்.

No comments:

Post a Comment