Saturday, May 26, 2012

யாழ். இந்திய துணைத்தூதுவராலய கலாசார உத்தியோகஸ்தரின் மகன் கடத்தப்பட்டு விடுதலை.


தனது மகன் நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

யாழ். பிரபல பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் 14 வயதான இம்மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து விடுதிரும்பி கொண்டிருந்த வழியில் காணாமல் போயிருந்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்படி சிறுவன் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பம்பவம் தொடர்பில் இலங்கைப் பிரஜையான, இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் கலாசார உத்தியோகத்தகர் எஸ்.பிரபாகரன் கூறுகையில், தனது இரண்டாவது மகன் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் சென்ஜோன்ஸ் கல்லூரி அருகில் வைத்து நான்கு நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

'இந்த கடத்தல் எதற்காக நடந்தது என்பது தொடரபில் எதுவும் தெரியவில்லை. கடத்தல் காரர்களின் நோக்கம் என்ன என்பதும் புரியவில்லை' என அவர் கூறினார்.

தனது மகனை வெள்ளை வானில் கடத்தியவர்கள் யார் என்பது தொடர்பாக யாழ். பொலிஸாருக்கு இன்றைய தினம் விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் கூறிய அவர் தற்போது தனது மகன் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment