Saturday, May 26, 2012

யாழ்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மிகப் பிரமாண்டமான மருத்துவக் கண்காட்சி



யாழ்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மிகப் பிரமாண்டமான மருத்துவக் கண்காட்சி நடை பெற்று வருகின்றது. அதைப் பல ஆயிரக்கணக்கான மக்களும் மாணவர்களும் பார்வையிட்டுப் பயனடைகின்றனர்.

வடக்கின் மக்கள் தொகை புள்ளி யொன்றில் சந்தித்தது போல தற்போது காட்சியளிக்கிறது யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகம். அலை மோதும் சனக்கூட்டத்தையும் தினமும் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வரும் பாட சாலை மாணவர்களையும் அங்கு காண முடிகிறது.



தென்னிந்திய சினிமாப் படங்களுக்கும் மெகா தொடர் நாடகங்களுக்கும் மட் டுமே அதிகளவான மக்களால் நேரம் ஒதுக்க முடிகிறது என்ற பொதுசன அபிப்பிராயத்தை மருத்துவக் கண்காட்சி முறியடித்துள்ளது.

"சுக வாழ்வை நோக்கி' என்ற தொனிப் பொரு ளிலான மருத்துவக் கண்காட்சி, யாழ்.பல் கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம் பெற்று வருகிறது. யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் இந்தக் கண் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கடந்த திங்கள்கிழமை கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தி ருந்தார். எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இதனைப் பார்வையிட முடியும்.

கடந்த எட்டு வருட இடைவெளியின் பின் னர் இடம்பெற்றுவரும் இந்தக் கண்காட்சி யைப் பார்வையிடுபவர்களுக்கு பயன்கள் ஏராளம். கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக நுழையும் முகப்பு வாயில் தொடக்கம் வெளியேறும் இடம் வரை மிகவும் அழகிய உருவ அமைப்புகள் பிரமிக்கத்தக்க வகை யில் அலங்கரிக்கப்பட்டு நிலைநிறுத்தி வைக் கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஆழ மான கருத்துகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.

யாழ்.நகரிலுள்ள ஒல்லாந்தர் காலத்து கோட்டையின் பிரதான நுழைவாயிலின் அமைப்பை ஒத்ததாக ஓலைகளால் நேர்த்தி யாக அமைக்கப்பட்ட மாதிரி அமைப்பை மருத்துவ பீடத்தின் பிரதான நுழைவாயி லில் காணமுடிகிறது. அதனூடாக மருத்துவ பீடக் கட்டடத் தொகுதியை அடைய முடியும்.

உள்ளே சென்றதும் ஆச்சரியப்பட வைக் கும் பிரமாண்டமான முறையில் அமைக் கப்பட்ட உருவ வடிவமைப்புகள் பலவற் றைத் தரிசிக்க முடியும். மனித உடலமைப் பும் அவற்றின் பகுதிகளும் இவ்வாறான உருவ அமைப்புகளாகக் காட்சி தருகின்றன.

ஐந்து விரல்களும் அகலத்திறந்துள்ள உள்ளங்கை போன்ற பெரிய உருவ அமைப் பின் ஊடாக உள்ளே சென்றே முதலாவது காட்சிக் கூடத்தைக் காணமுடியும். காட்சிக் கூடங்கள் ஒவ்வொன்றும் எந்த விடயத்தை வெளிப்படுத்துகின்றவோ அதே போலவே காட்சிக் கூடங்களின் வடிவமைப் புகளும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள் ளன.

பத்துக்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அங்கு உள்ளன. சுவாசத் தொகுதி, குருதிச் சுற்றோட்டத் தொகுதி, மையநரம்புத் தொகுதி, சமிபாட்டுத் தொகுதி, சிறுநீர் தொகுதி, புற்று நோயியல் மற்றும் குற்ற வியல் மருத்துவம், அகம் சுரக்கும் தொகுதி, தொற்று நோயியல் மற்றும் வெப்ப மண்டல நோயியல் தொகுதி, மகப்பேற்று மற்றும் பெண்கள் நோயியல் தொகுதி, குழந்தை மருத்துவம் என காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுவாசத் தொகுதி காட்சிக் கூடத்தை பார்வையிடுவதற்கு மூக்குப் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் வழியாக செல்ல முடியும். அவ்வாறுதான் சமிபாட்டுத் தொகுதி காட்சிக் கூடத்தைக் காண்பதாயின் நேர்த்தியான பல்வரிசை அமைப்பைக் கொண்டுள்ள வாய்த் தோற்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயி னுள் பிரவேசிக்க வேண்டும்.

காட்சிக் கூடங்களில் செய்முறை விளக் கம், விவரணப் படங்கள் வீடியோக் காட்சிகள், விளக் கப் படங்கள் மூலம் தெளி வுபடுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ பீட மாணவர்கள் மிகவும் இலகுவான முறை யில் தெளிவு படுத்துவதை அவதானிக்க முடிகிறது.
இதன் காரணமாக காட்சிக் கூடங்களில் சனக்கூட்டம் அலை மோதி வருகிறது. கண்காட் சியை முழுமையாகப் பார்வை யிட்டு, முடிப்பதாயின் சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேலாக செலவிட வேண்டி இருக்கும்.

இந்தக் கண்காட்சி உடல் உள ஆரோக்கியத்தைப் பேணுவதற் கும், எட்டிப் பிடித்துள்ள நோய் களைத் தூர விரட்டுவதற்கும் வேண்டிய ஆலோசனைகள் அறி வுரைகள் பெறுவதற்கும், மருத்துவ ரீதியான அறிவை மேலும் விருத்தி செய்வதற்கும் பார்வையாளருக்கு பயனுள்ளதாக அமையும். கண்காட்சி யைப் பார்வை யிட்டவர்கள் சிலரிடம் கருத்துக் கேட்டபோது இந்த நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இந்தக் கண்காட்சி நிகழ்வினை பார்வையிடுவதுக்கு வருகை தந்தி ருந்த பாடசாலை மாணவர்களில் ஒரு சிலர் அவ்வப்போது மயங்கி வீழ்வதை அவதானிக்க முடிந்தது.

அலைமோதும் சனத்திரள் காரணமாக ஏற்படும் அசௌ கரியங்களால் மாணவர்கள் மயங்கி வீழ்ந்து இருக்கலாம். எமது பகுதி இளம் சமூகத்தினரின் உடல் ஆரோக்கி யம் குன்றி இருப்பதனையே இது எடுத் துக் காட்டுகிறது. எனவே எமது சமூ கத்தின் போஷாக்கு நிலையிலும் உடல் உள ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தவேண்டி உள்ளது என்ற விடயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதுக்கு கண்காட்சி பெரிதும் உதவும்.

இந்தப் பிரமாண்டமான மருத்துவக் கண்காட்சியை மிகச் சிறப்பாக நடத்தி மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தி நிற்கும் மருத்துவபீட மாண வர்கள், எதிர்காலத்தில் எமது பகுதி மக்க ளுக்கு மருத்துவ சேவையை வழங்கி மக் களின் உடல் உள ஆரோக்கியத்தை பேண முன்வருவார்கள் என நம்பலாம்.

இட வசதிகளின் தேவை கருதி மருத் துவ பீடத்தின் மூன்றாம் மாடி வரை காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோயா ளர்கள், முதியவர்கள், உடல் அங்கங்களை இழந்தவர்களுக்கு மாடிப்படிகளில் ஏறிக் கண்காட்சியைப் பார்வையிடுவதுக்கு சிரமமாக இருக்கிறது என்று ஒரு விமர்ச னத்தைத் தவிர இந்தக் கண்காட்சி மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இவ் வாறான ஆக்கபூர்வமான நிகழ்வுகளால் எமது மண் மேலும் சிறப்புப் பெருமை அடைய வேண்டும்.

வருடத்துக்கு ஒருமுறை இதுபோன்ற மருத்துவக் கண்காட்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுமானால் யாழ். குடாநாட்டிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

இந்தக் கண்காட்சியில், மருத்துவத் துறையால் குணப்படுத்தவே முடியாது என்று பொதுமக்களால் கருதப்படும் புற்று நோய் போன்ற ஆபத்துமிகு நோய்களுக்கு, அதனை உரிய மருத்துவ பராமரிப்பின் ஊடாக குணப்படுத்தலாம் என்ற விடயம் காட்சிபூர்வமாகத் தெளிவுபடுத்தப்பட் டிருக்கின்றது.

மாரடைப்பு, நீரிழிவு, குழந்தை மருத்துவம் மற்றும் உளவியல் விருத்தி போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களின் ஆலோசனையின்படி மருத்துவ பீட மாணவர்களால் அமைக்கப் பட்டுள்ள குறித்த நோய்கள் தொடர்பான காண்பியங்கள் பார்ப்போர் மனதில் என்றும் அகலாமல் இருக்கக் கூடியவை.

இதுவரை நோய் என்பதற்கு வடிவம் காணாமல் அருவ நிலையில் நோக்கியவர் களுக்கு இந்தக் கண்காட்சி உரிய வரை வையும் அதற்கான விளக்கத்தையும் வழங்கியிருக்கின்றது. அது இன்னும் பல ஆண்டுகளுக்கான விழிப்புணர்வை வழங் கும் என்பதில் பார்க்க வந்த எவரிடத்திலும் ஐயமில்லை.

பாடசாலை மாணவர்கள் இந்தக் கண்காட்சியில் உச்சக்கட்டமான பயனை அடைந்திருக்கிறார்கள். இப்போது பாடசாலைக் கல்வித் திட்டத்தில் விஞ்ஞானம் துறைசார்ந்த பாடங்கள் காட்சி பூர்வமான கற்றலை வேண்டி நிற்கிறது. "வண்ண மயப்பட்ட படிமங்களூடாக மாணவர்கள் மனதில் ஆழப் பதியவைத்தல்'' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கல்வித் திட்டம் மாற்றம் பெற்று விட்டது. ஆனால் அதற்கான கற்றல், கற்பித்தல் வசதிகள் இன்றியே வடக்கில் பல பாடசாலைகள் இயங்குகின்றன. இந்த நிலையில் மருத்துவ பீடக் கண்காட்சி மாணவர் மனதில் அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்திருக்கின்றது.

மனித உடலின் பாகங்கள் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டு அதற்கான விளக்கங்களும் இலகு வான முறையில் அளிக்கப்படுகின் றன. பாடப் புத்தகத்தில் படமாகப் பார்த்துப் படித்த மாணவர்களுக்கு இந்தக் கண்காட்சி படிமரீதியான விளங்கப்படுத்தலை வழங்கியி ருக்கிறது.

இதுவரை காலமும் குறைந் தளவிலான அறிவியல் நோக்கைக் கொண்டிருந்த வடக்குப் பகுதிக்கு இந்தக் கண்காட்சி விரிவான பார்வையை வழங்கியிருக்கிறது. அச்சு ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் என அனைத்தி லும் வடக்கின் அறிவுசார் தேட்டத்தின் வெளிப் பாடான இந்தக் கண்காட்சி பொதுமக் களைச் சென்றடைவதற்கான வழிவகை செய்துகொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்களும் இன்னும் பார்க்க வில்லை என்றால், இன்றே பார்த்துவிடுங்கள்.





ஸ்ரீ ராஜா

No comments:

Post a Comment