Saturday, April 7, 2012

மட்டக்களப்பில் ஒரே இரவில் நான்கு சிலைகள் உடைக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட செயல்


மட்டக்களப்பில் ஒரே இரவில் நான்கு சிலைகள் உடைக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட செயல் என்பதுடன் இதன் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது பொலிஸாரினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததுடன் இதற்கு தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பி.அரியநேத்திரன் , பொன். செல்வராசா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்திருப்பதாவது:
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரன் எம் பி தெரிவிக்கையில்:
திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்புடன் கிழக்கு மாகாணத்தில் சிலை உடைப்பு ஆரம்பமாகிய நிலையில் இதற்கு அடுத்த படியாக ஆரையம்பதியில் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் சிலை உடைக்கப்பட்டது. இச் சிலை மீண்டும் வைக்கப்பட்டு 48 மணி நேரத்தில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் உடைக்கப்பட்டுள்ளது. இதனுடன் மட்டு நகரிலுள்ள மகாத் மா காந்தியின் சிலை , சாரணர் தந்தை பேடன் பவல் மற்றும் புலவர் மணி பெரிய தம்பிப் பிள்ளை ஆகியோரது சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர்களின் சிலை இடிக்கப்பட்டமையானது தமிழ் மக்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கலாம் அல்லது கடந்த வருட கிறிஸ் பூதம் அச்சம் இருந்த நிலையில் இவ்வருட கிறிஸ் பூதத்துடன் சம்பந்தப்பட்டவர்களென மக்கள் கருதுகின்றனர். தற்போது சிலைகளை உடைத்து அச்சுறுத்துகின்றனரா என என்னத் தோன்றுகின்றது. இதனை நான் கண்டிப்பதுடன் இதன் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அரசினதும் பொலிஸாரினதும் கடமையாகும்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா எம் பி தெரிவிக்கையில்:
மட்டு.நகரிலுள்ள சிலைகள் பொலிஸ் நிலையத்துக்கு 250 மீற்றர் தூரத்தில் உள்ள அதேநேரம் மட்டு பஸ் தரிப்பிடத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ளது. சன நடமாட்டம் உள்ள பகுதியில் இச் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனை எனது கட்சி சார்பில் கண்டிக்கின்றேன். இதேவேளை தென் கிழக்கு ஆசிய ஜம்போறி இடம்பெற்று வரும் நிலையில் இச் சிலை உடைக்கப்பட்டது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து யோகேஸ்வரன் எம் பி தெரிவிக்கையில்:
பேடன் பவல் மற்றும் மகாத் மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமை ஜெனீவா தீர்மானத்தின் விரக்தியின் விளைவாக செய்யப்பட்டதோ என என்ன தோன்றுகின்றது. அதேவேளை இங்குள்ள ஒரு கட்சி தன்னை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த சிலை வைக்கும் நடவடிக்கை யில் இறங்கியுள்ளது.
இதன் பின்னணியில் இச் சிலை உடைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. எது எப்படி இருப்பினும் இது கண்டிக்கத்தக்க விடயம். இதில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோருகின்றேன்.

No comments:

Post a Comment