Friday, November 11, 2011

யாழில் பாடசாலை அதிபரை வீட்டில்வைத்து வெட்டிக் கொலை !


யாழ். மாவட்டம் தென்மராட்சிப் பிரதேசத்தில் வரணி, கரம்பைக்குறிச்சி அரசினர் தமிழ்கலவன் பாடசாலையின் அதிபர், யாழ். கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் அறையொன்றிலிருந்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். அதிபர் சிவசுப்ரமணியம் தயாபரன் (வயது 40) என்பவரே கடந்த இரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ். மீசாலைப் பகுதியில் வசிக்கும் பாடசாலை அதிபர் தயாபரனுக்கு, யாழ். கந்தர்மடம் புகையிரதநிலையத்திற்கு அருகிலும் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அதிபர் அவ்வப்போது சென்று வீட்டைப் பார்வையிட்டுச் செல்வது வழக்கம். இரண்டு மாடிகளைக் கொண்ட அவரது வீட்டின் கீழ் தளத்தில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் தற்காலிகமாக குடியமர்ந்துள்னளர். நேற்று வியாழக்கிழமை வழமைபோல தனது வீட்டினைப் பார்க்கச் சென்ற அதிபர் தயாபரன் மேல்மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்துள்ளார்.

இறுதியாக 9.00மணியளவில் அவர் தனது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவருடைய தொடர்பு கிடைக்காத நிலையில் வீட்டினர் மீசாலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று பார்த்த போது அவர் கத்திவெட்டிற்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து வீட்டார் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்துசென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இதேவேளை வீட்டின் கீழ் தளத்தில் தங்கியிருந்த சிங்கள மாணவர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். தாம் தமது பெருநாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு காலம் தாழ்த்தே வீட்டிற்கு திரும்பியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். என தெரிவிக்கப்படுகிறது.


 

No comments:

Post a Comment