Thursday, September 22, 2011

இந்தியா போய் தற்போது பொது எதிரி அமெரிக்காவிடம் பிச்சை கேட்கும் ஸ்ரீ தரன் தலைமையில் தமிழினம்!!


தமிழ் தேசியக் கூட்டமைப்பு – அரசாங்கப் பேச்சில் இனப் பிரச்சினை தீராது! மூன்றாம் தரப்பு தேவை! அமெரிக்காவிடம் சிறிதரன் கோரிக்கை
[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 04:42.22 PM GMT ]
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெற்றீசியா பியூட்டினியஸ் இன்று வன்னிக்கான விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது அவர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். அங்கு தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனையும் சந்தித்து இனப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார்.
அரசாங்க அதிகாரிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்தித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடினார்.
வன்னிக்குப் பொறுப்பான இராணுவக்கட்டளைத் தளபதியையும் அவர் சந்தித்தார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனையும் அவர் கிளிநொச்சியில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், வன்னியில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதை தாம் அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார்.
முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் பகுதிகளில் இடம்பெறும் சிங்கள குடியேற்றம், வெலிஓயா பிரதேசத்துக்கு வர்த்தமானி அறிவித்தல் இன்றி உதவி அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் முல்லைத்தீவின் 6 வது உதவி அரசாங்க அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நேற்றும் முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியின் பரவிபாஞ்சான் மற்றும் 5 ஆம் வாய்க்கால் பகுதிகளில் இன்னும் 300 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை.
அங்கு இராணுவ வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கந்தசாமி கோயிலின் அன்னச்சாலை இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வன்னேரிக்குளத்தில் உள்ள வயோதிபர் மடம், பூநகரி பாடசாலை உட்பட்ட முக்கியமாக பொதுமக்களின் கட்டிடங்கள் இன்னமும் இராணுவத் தளங்களாக உள்ளன போன்ற விடயங்கள் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டதாக சிறிதரன் குறிப்பிட்டார்.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும்.
காணாமல் போனவர்கள் கணவர்மாரை இழந்த பெண்கள், வடக்கு, கிழக்கில் உள்ள 12 ஆயிரம் பட்டதாரிகளின் விடயங்களில் கவனம் செலுத்தப்படவேண்டும்.
அத்துமீறி சிங்கள குடியேற்றமே இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணம் என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதாக சிறிதரன் கூறினார்.
இலங்கை இனப்பிரச்சினை வடக்குகிழக்கு இணைந்த நிலையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாக்கும் வகையில் காணப்படவேண்டும்.
வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை அரசாங்கமும் பேச்சு நடத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது.
இந்த பேச்சுவாhர்த்தைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமாகும்.
இதன்போதே இனப்பிரச்சினைக்கான தீர்வை காணமுடியும் என்றும் தாம் பெற்றீசியா பியூட்டினியஸிடம் தாம் சுட்டிக்காட்டியதாக சிறிதரன் கூறினார்.
தமிழர்களின் நீண்டகால அரசியல் விருப்பை நிறைவேற்ற மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியம்!- அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் பற்றீசியாவிடம் சிறிதரன் எம்,பி எடுத்துரைப்பு
அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் பற்றீசியாவும் அவருடைய குழுவினரும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களை கிளிநொச்சியில்; அமைந்துள்ள கூட்டமைப்பின் பணிமனையான அறிவகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
சுமார் 40 நிமிடம் நீடித்த கலந்துரையாடலின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு வாழ்வியல் சவால்கள் குறித்தும் அவசரகால சட்டத்தின் நீக்கத்தின் பின்னரான களநிலவரம் குறித்தும் தூதுவர் விரிவாக கேட்டறிந்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பரவிப்பாஞ்சான் உட்பட கிளிநொச்சியின் உயர்பாதுகாப்பு வலயங்கள், பூநகரி விக்னேஸ்வரா பாடசாலை, பூநகரி அரச வைத்தியசாலை என்பவற்றில் இராணுவம் நிலைகொண்டுள்ளமை குறித்தும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்களிலும், மக்களின் நாளாந்த விடயங்களிலும் இராணுவத்தினரின் நேரடி தலையீடு குறித்தும் பல உதாரணங்களை சுட்டிக்காட்டி விளக்கமளித்தார்.
தொடர்ந்து முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் செயற்படுத்தப்படுகின்ற திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் காணிப் பிரச்சினைகள், கிறீஸ் மனிதன் விவகாரத்தால் எழுந்துள்ள பாதுகாப்பின்மைகள், 2009 மே க்கு பின்னர் தமிழ்மக்கள் கொண்டுள்ள அரசியல் அச்சநிலமை என்பவை தொடர்பிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேற்சொன்ன விடயங்களை கேட்டறிந்த தூதுவர் நிரந்தர தீர்வு காணுவது தொடர்பில் தமிழ் மக்கள் எதனை எதிர்பார்க்கின்றனர் என வினவிய போது அவர்களுடைய வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு சர்வதேச தராதரம் உள்ள அதிகாரப்பகிர்வு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யப்படும்போது சர்வதேச ரீதியான மூன்றாந்தரப்பு மத்தியஸ்தம் ஒன்றினூடாகவே முழுமையான அதிகாரப்பகிர்வு நடைபெற முடியமென்பதையும், அத்தகைய அதிகார பகிர்வில் பொலிஸ்,  காணி அதிகாரங்கள் உள்ளடக்கப்பட்டால் கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள்  எதிரநோக்கி வருகின்ற  அடக்குமுறைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் பாராளுமன்றத் தெரிவு குழு அமைக்கும் முயற்சி காலத்தை கடத்தும் அரசின்  செயல் என கடந்த கால சம்பவங்களை நினைவூட்டி வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை தீவில் அமைதி, சமாதானம் இனங்களுக்கிடையில் நல்லுறவு நிலவ வேண்டுமாக இருந்தால் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் புலம்பெயர் சமூகத்தினுடைய பங்களிப்பையும் பெற்று அதிகார பகிர்வொன்றை இலங்கையில் மேற்கொள்ளுதலே நீடித்த சமாதானத்திற்கும், நிலையான அபிவிருத்திக்கும் வழிவகுக்கும் என்றார்.
இதன் போது அனைத்து விடயங்களையும் கேட்டறிந்த தூதுவர் தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுதலில் அக்கறை செலுத்துவதாக தெரிவித்ததுடன் கடந்த  உள்ளுராட்சி தேர்தலின் போது, ஈ பி டி பி யின் தாக்குதலுக்குள்ளான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தொடர்பாகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்களுடையதும் குறிப்பாக சிறிதரன் அவர்களின் பாதுகாப்பு நடைமுறை குறித்தும் விசாரித்து அறிந்ததுடன், எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொடர்புகள் ஊடாக தமிழ் மக்களின் விடயங்களில் தாம் கரிசைனையுடன்  செயற்படுவோம் என கூறிச்சென்றார்.

No comments:

Post a Comment